சனி, 8 ஜனவரி, 2011

போலீஸ் ஸ்டோரி


மேஜையில் கொட்டப்பட்ட சரக்கு அந்த அறையின் இருட்டிலும் டாலடித்தது.

ஜாபரின் முகத்தில் பரமதிருப்தி. “என்னடா நான் சொன்னது சரிதானாஎன்பது போல் கூட்டாளிகள் மாட்டு காசியையும் பங்க் பூபாலையும் ஒரு பார்வை பார்த்தான்.

“என்னப்பா பாத்துகிட்டே இருக்கிங்க சீக்கிரம் வாங்கிகிட்டு கிளம்புங்க எனக்கு வேற சோலி இருக்கு பரபரத்தான் ராமர்.

ராமர் எப்பவும் இப்படித்தான். எப்பவும் டென்சனாகத்தான் இருப்பான். அவன் வியாபாரம் அப்படி.

“எவ்வளவுன்னே சொல்லுறிங்க பங்க் பூபால் பேரத்தை ஆரம்பித்தான்.

“கைகள் இரண்டயும் தூக்கி பத்து விரல்களையும் காண்பித்தான் ராமர்.

‘என்னடா வழக்கத்தவிட ஜாஸ்தியாயிருக்கு ஜாபர் காதைக் கடித்தான் மாட்டு காசி.

“ஷ் வாயில் விரலைவைத்து கூட்டாளிகள் இருவரையும் அடக்கிய ஜாபர்,அண்ணே கேட்டத தரேன் பேக் பண்ணுங்கஎன்றான் ராமரிடம்.

ஜாபர் இப்படித்தான் ஒரு தடவ முடிவு பண்ணிட்டா அவன் பேச்ச அவனே கேட்க மாட்டான்.

பேரம் முடிந்து சரக்கை எடுத்துக் கொண்டு மூவரும் வெளியே வந்தனர். ஜாபர் சுற்றும் முற்றும் யாராவது தங்களை கவணிக்கிறார்களா என நோட்டம் பார்த்துக் கொண்டான். மூவரும் அவர்கள் வந்த வண்டியைப் பார்க்கிங் செய்திருந்த வாதாம் மரத்துக்கு வந்தனர்.

ஜாபர் வண்டியை ஸ்டார்ட் செய்ய பங்க் பூபால் முன்னாலும் மாட்டு காசி பின்னாலும் அமர்ந்து கொண்டனர்

“எந்த வழியுலடா போகப்போறே?’ மாட்டு காசி ஜாபரிடம் கேட்டான்.

‘ஏன் வந்த வழியிலதான் இது ஜாபர்

“வேணாம்டா, அந்த வழியிலெ போலிஸ் ஸ்டேசன் இருக்கு, பேசாம தட்டான் தோப்பு வழியா கொந்த கருணை அப்பா தர்ஹாவைச் சுத்திப் போயிடு, அந்த வழியாப்போனாத்தான் ஆள் நடமாட்டம் இருக்காது சொல்லும் போதே மாட்டு காசியின் குரலில் ஒரு மிரட்சி தெரிந்தது.

“போடா எலவெடுத்தவனே, ஏண்டா பயப்படுறே, இந் நேரம் போலிஸ் ஸ்டேசன்ல ஒரு பயலும் இருக்க மாட்டான், இருக்குற ஒன்னு ரெண்டு பேரும் மத்தியானம் சாப்புட்ட மப்புல தூங்கிகிட்டு இருப்பான் பேசாம வா பத்து நிமிசத்துல போயிச் சேந்துறலாம் ஜாபரின் குரலில் ஒரு தைரியம். போலிஸ் ஸ்டேசன் ஜாபருக்கு ஒன்னும் புதுசல்ல, அடிக்கடி போய் வருவதால் கூட்டாளிகளின் பேச்சை அலட்சியம் செய்து வண்டியை போலிஸ் ஸ்டேசன் வழியாகவே ஓட்டிச் சென்றான்.

போலிஸ் ஸ்டேசன் நெருங்கி விட்டது. இப்போது ஜாபரின் நெஞ்சிலும் படபடப்பு. சப் இன்ஸ்பெக்டருக்கு ஜாபரின் மொள்ளமாரித்தன்ங்கள் நன்கு தெரியும், அவர் கண்ணில் பட்டு விட்டால் போதும் வேற வினையே வேண்டாம். பேசாமல் கூட்டாளிகள் சொன்னதுபோல் கொந்த கருணை அப்பா தர்ஹாவைச் சுற்றியே போயிருந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டான். எப்படியோ சரக்கை பத்திரமாக சேர்த்தால் போதும் என வலது காலினால் வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.

விதி வேறுமாதிரி நினைத்தது. சரியாக போலிஸ் ஸ்டேசனுக்கு பத்தடிக்கு முன்னால் ரோட்டின் கிடந்த கல் மேல் வண்டி ஏறாமல் இருக்க வண்டியை இடது பக்கம் திருப்பியவன் எதிரே வந்த ஒரு கிழவியை கவணிக்காமல் அவள் மேல் வண்டியை மோதி நிறுத்தினான்.

‘அடப்பாவி கொண்ணுபுட்டிங்களடா பார்த்து பதைத்து கத்தியவர்களின் குரல் கேட்டு போலிஸ் ஸ்டேசனிலிருந்து காவலர்களும் வெளியே வந்தனர்.

போலிஸைப் பார்த்த்தும் ஓட எத்தனித்த மாட்டு காசியின் கையிலிருந்து சரக்கு கீழே விழுந்தது.

“சார் குண்டு வச்சிருக்கானுங்க சார், கீழே விழுந்த சரக்கைப் பார்த்த்தும் கூட்டத்தில் ஒருவன் கத்தினான்.

மூவரும் வசமாக மாட்டிக் கொண்டனர். ஜாபர் காவலர்களைப் பார்த்தான் புதுசு போல அவர்களுக்கு ஜாபரை அடையாளம் தெரியவில்லை.அவர்கள் மூவரையும் நெட்டித்தள்ளிய காவலர்கள் ஸ்டேசன் உள்ளே இன்ஸ்பெக்டரிடம் கொண்டு சென்றனர்.

“என்னய்யா பிரச்சினை இன்ஸ்பெக்டரின் குரலில் மதிய தூக்கம் கலைந்த கடுப்பு.

“சார் ஓவர் ஸ்பீடு சார், ஒரு கிழவி மேல ஏத்திப்புட்டானுக, பையில குண்டெல்லாம் வச்சிருக்கானுக சார் ஒரு காண்ஸ்டபிள் கீழே விழுந்த குண்டுகளை எடுத்து இன்ஸ்பெக்டரின் டேபிள் மீது பரப்பினார்

கையில் பிரம்பை எடுத்த இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், மாட்டு காசி பயத்தில் ஒன்னுக்குப் போக ஆரம்பித்தான்.

“சீ சீ எருமை மாடு ஸ்டேசன அசிங்கம் பண்றியாடா ராஸ்கல் “ என மாட்டு காசியை நெருங்கிய இன்ஸ்பெக்டர் அந்த சூழ்நிலையிலும் அலட்சியமாக நின்று கொண்டிருந்த ஜாபரைக் கவனித்தார்.


“டேய், நீ சப் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹ்மான் பையன்ல, உங்கப்பாவைப் பார்க்க அடிக்கடி இங்கே வருவில்ல ஜாபர் காதை திருகினார். “ஏண்டா சப் இன்ஸ்பெக்டரின் பையன்னா சைக்கிள்ள டிரிபிள்ஸ் போவியா அதுவும் போலிஸ் ஸ்டேசன் முன்னாடியே, படவா ராஸ்கல் ஸ்கூல் போயிட்டு வந்தா வீட்டுல படிக்கிற வேலைய விட்டுட்டு கோலிக்குண்டு வாங்கிட்டு திரியிரிகளடா, வா அப்படியே மூனு பேரும் காதைப் பிடிச்சுகிட்டு ஆளுக்கு அம்பது உக்கி போடு திட்டிய இன்ஸ்பெக்டர் காண்ஸ்டபிளைப் பார்த்து கேட்டார்.

‘ஏன்யா இவனுக வண்டில இடிச்ச கிழவி என்னயா ஆச்சு

“அது அப்பவே எந்திரிச்சு வீட்டுக்கு போயிருச்சு சார்


3 கருத்துகள்:

Charles சொன்னது…

good story

தங்கராசு நாகேந்திரன் சொன்னது…

நன்றி சார்லஸ்

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) சொன்னது…

சூப்பர் கதை தலீவா

கருத்துரையிடுக

ஏதாவது சொல்லிட்டு போங்க