வியாழன், 6 ஜூன், 2013

எதிர் நீச்சல்

குஞ்சிதபாதம்ன்னு பேரு வச்சிகிட்டு நம்ம சிவ கார்த்திகேயன் படுற பாடுகளை எதிர்நீச்சல் படத்தில பார்த்த பின்னர் நம்ம சமூகத்தில இதே மாதிரி பல சொந்தப் பெயருகளையும் பட்டப் பெயர்களையும் வச்சிகிட்டு நம்மாளுக பலரும் படுற அவஸ்தைகளைப் பற்றி இந்த பதிவு.

எங்க சமூகத்தில பெரும்பாலும் குடும்பங்களை ஊர் பெயர் சொல்லிதான் உறவினர்கள் அடையாளம் காண்பாங்க. எங்க குடும்பத்தினை செல்வனூரான் என்று சொல்வது போல் காமன் கோட்டையான் ரெகுநாதபுரத்தான், புதுமடத்தான், எலம்பாட்டான், சிக்கலான், பேரையூரான், காக்கூரான் மட்டியனேந்தலான் இப்படி ஊரை வச்சி சில பேரு இருக்கும். அப்புறம் ஊரில அவன் எந்த குடும்பத்துக்காரன் என்பதை தாத்தா முப்பாட்டனாருக்கு சில பட்டப் பேரு இருக்கும் பாருங்க அத வச்சிதான் கூப்புடுவாங்க.

அந்த பேருங்கள்ளாம் பாருங்க பெரும்பாலும் முன்னோர்கள் என்ன விரும்பிச் சாப்பிடுவாங்களோ அத வச்சிதான் பேரு இருக்கும். இல்லன்னா அவுங்க என்ன வேலை பாத்தாங்களோ அத வச்சி இருக்கும்.

கம்மங்கஞ்சி, சுண்டைக்காய், கல்கண்டு, சுத்தக் கள், வெந்தய குழம்பு மிளகுதண்ணி இப்படி சில பேரு. இதுல மிளகு தண்ணிங்கிற பேரு அவருக்கு எப்படி வந்ததுன்னா அவரு எந்த சொந்தக் காரங்க ஊருக்குப் போனாலும் சாப்பிட உட்காந்தாருன்னா முதல்ல இலை நிறைய சோற வாங்கிட்டு பின்னர் குழம்பை அதுல கொள கொளன்னு கொட்டுவாராம். பின்னர் குழம்பு அதிகமாயிருச்சு சோறப் போடுங்கன்னு சொல்லி அதுல அதிகமா சோறப் போட்டு மறுபடியும் குழம்ப ஊத்த சொல்லுவாராம். அதுனால இவர் வர்றாருன்னு தெரிஞ்சாலே எல்லாரும் மிளகுதண்ணிதான் (ரசம்)குழம்பா வைப்பாங்களாம்.

அப்புறம் தொழிலை அடிப்படையா வச்சி டெய்லர் , ஐஸ் கம்பெனிக்காரர், பண்ரொட்டிக்காரர்,லாஞ்சிக் காரர்,கரண்டுக்காரர், ஆப்பை கொத்துறவருன்னு பல பேரு இருக்கும். இதுல ரொமப பாதிக்கப் பட்டவரு எங்க ஊருல பண்ணி வாத்தியாருதான். வாத்தியாரு வேலை பார்த்த இவரு பார்ட் டைமா பண்ணிங்கள வளத்து வித்துகிட்டு இருந்தாரு. அதுனால பண்ணி வாத்தியாரு பண்ணி வாத்தியாருன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சி அவரோட இயற்பெயர் என்னன்னே பலபேருக்கு தெரியாம போச்சு. அவரும் அத பெருசா எடுத்துகல. ஆனா பிள்ளைங்க தலையெடுத்தவுடன் பிள்ளைங்களையும் பண்னி வாத்தியாரு மகன், பன்னிவாத்தியாரு மருமகன்ன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிங்கவும் அவரு ரொம்ப வருத்தமாகி பண்ணி வளர்ப்பு தொழிலை அடியோடு தலை முழுகிட்டு ஒரு பத்தாயிரம் நோட்டிஸ் அடிச்சு ஊருல்ல குஞ்சு குழுவானுகெல்லாம் கொடுத்தாரு. அதுல அவரு என்னை இனிமே யாரும் பண்ணி வாத்தியாருன்னு கூப்பிடக்கூடாதுன்னு ரொம்பவும் உருகி கேட்டுருந்தாரு. இருந்தாலும் யாரும் அதை சட்டை பண்ணல. இன்னும் அவங்க குடும்பத்துக்கு பெரிய லைன் வீடுங்களாம் இருக்கு. அதுக்கு பெயரே பண்ணி வாத்தியாரு காம்பவுண்டுதான்.

எங்க அய்யாவுக்கு இடதுகை பழக்கம் இருந்திருக்கும் போல அதுனால அவரோட பட்டப் பெயர் வல்லங்கை. அது எங்க பரம்பரைல்ல யாராவது ஒரு வாரிசுக்கு மட்டும் வாழையடி வாழையா வந்துகிட்டு இருக்கு. எங்கப்பா கூடப் பிறந்தவுங்கள்ள எங்க பெரியப்பாவுக்கும் எங்க தலைமுறையில எனக்கும் எங்களோட அடுத்த தலைமுறையில எங்க அண்ணன் மகனுக்கும் இடது கை பழக்கம்தான். என்னையவே யாரும் வல்லங்கைன்னு கூப்பிடும் போது எனக்கு ரொம்ப பெருமையாகவே இருக்கும்.

ஆனா நான் பள்ளியில படிக்கும் போது உயரம் தாண்டுதலில் கலந்துகிட்டேன் அதுல முதல் மூணு கட்டங்களை எளிதாக தாண்டிய நான் அதுக்கப்புறம் உயரத்தை அதிகரிச்சவுடன் ஒரு மாதிரி பல்டி அடிச்சு தாண்டினேன். அதப் பாத்திட்டு எங்க பி டி வாத்தியாரு கொசு உள்ளான் மாதிரி தாண்டினயாடான்னு பாராட்டினாரு பாருங்க. பசங்க அப்படியே புடிச்சிகிடானுக அதுல இருந்து என் கொசு உள்ளான்னு மாத்திட்டானுக. பத்தாவது படிக்கிற வரைக்கும் அந்த பேரக் கேட்டா எனக்கு பயங்கர காண்டாகிடும். அப்புறம் அது பழகிப் போயி இப்ப என்ன யாரும் கொசு உள்ளான்னு கூப்பிட்டா எனக்கு சட்டுன்னு புரிஞ்சிடும் அடடா இவன் நம்மளோட ஸ்குல்ல படிச்சவுன்னு.

அதுக்கப்புறம் காலேசுல படிக்கும் போது நான் பர்ஸ்ட் செமஸ்டருல நாலு அரியரை வாங்கிட்டேன். ரொம்ப துக்கமா போச்சு. அதுக்கப்புறம் அந்த அரியரையும் பாஸ் பண்ணி மூனாவது செமஸ்டருல்ல ஆல் பாஸ் பண்னுனேன் அதுவும் 78.5% மார்க்குல. தலை காலு தெரியாம கேட்கிறவுனுகெல்லாம் பார்ட்டி கொடுத்தேன். (சும்மா டிபன் பார்ட்டிதான்.) அதுல எல்லாரும் எனக்கு பார்ட்டின்னு பேரு வச்சிட்டானுக. காலேசுல படிச்சவுங்களுக்கு நான் எப்போதும் பார்ட்டிதான்.

மகனுக்கு அழகா குகன்னு பேரு வச்சேன். அவன தெருவுல எல்லோரும் குகான்னு கூப்பிடாம கூகா கூகான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. சரி அவனத்தான் அப்படி கூப்பிடுறாங்கன்னா என்னையும் கூகாப்பா கூகாப்பான்னு கூப்பிட ஆரம்பிச்சு கடைசியில நண்டு சிண்டெல்லாம் என்னை மபோகா ஆனந்த் மாதிரி கூகாபா நாகேந்திரன்னு கூப்பிடுதுக. பரவாயில்ல இதுவும் நல்லா இருக்கு.





மொய்




திருமணம் முடிந்தவுடன் நல்லா சாப்பிட்டுவிட்டு மொய் எழுதுற பழக்கத்தினை யார் ஆரம்பிச்சிருப்பாங்கன்னு தெரியல. கண்டிப்பா அந்த காலத்தில விசேசம் நடத்துனவுங்க வாயைத்திறந்து கேட்டிருக்க மாட்டாங்க. ஆனா யாராவது ஏழை எளியவுங்க கல்யாணத்துக்கு போன நாலு பெரிய மனுசனுங்க விசேசக்காரர் குறிப்பா பொண்னு வீட்டுக்காரங்க நல்லா இருக்கனுமுனு நினைச்சு நாலு காச கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் அதுவே காலப் போக்கில நோட்டு போட்டு எழுதுற அளவுக்கு வாடிக்கை ஆயிருச்சு போல இருக்கு.

எங்க வீட்டு பீரோவுல எங்கம்மா ஒரு ஏழெட்டு மொய் நோட்டு வச்சிருக்காங்க. எல்லாம் எங்க அண்ணன் தம்பி அக்கா தங்கசிங்க கல்யாணத்துக்கு வந்த மொய் நோட்டுதான். யாராவது சொந்தக்காரங்க பத்திரிக்கை கொடுத்தாப் போதும். அவுங்க போன பின்னே கடைசியா நடந்த எங்க வீட்டு கல்யாணத்தில அவுங்க எவ்வளவு மொய் எழுதினாங்கன்னு எங்கம்மா அந்த நோட்டுல ரெஃபர் பண்ணிட்டுதான் பத்திரிக்கை வச்சவுங்களுக்கு எவ்வளவு மொய் எழுதனும்ன்னு முடிவு பண்ணுவாங்க. சில பேரு எவ்வளவு எழுதினாங்கன்னு எங்கம்மா மனப்பாடமா நினைவு வச்சிருப்பாங்க. ”சண்முகம் முத கல்யாணம் இப்பத்தான் பண்ணுறான் ஏற்கனவே நமக்கு அஞ்சு விசேசத்தில நூறு நூறு ரூபா எழுதியிருக்கான் அதனால அவனுக்கு ஒரு முன்னூறு ரூபா எழுதுவோம் அடுத்து ஒரு பையன் வச்சிருக்கான்ல அவனுக்குப் பாக்கி இருநூறு ரூபாயை எழுதுவோம்ன்னு கணக்கா பேசுவாங்க”.

அதே மாதிரி கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தவுங்க அவுங்க நடந்துக்கிற அல்லது செய்முறையைப் பொறுத்து எங்கம்மாவோட மொய் அளவு மாறும். வந்தவுடனே வெந்நித்தண்ணியை காலில ஊத்துன மாதிரி கிளம்பிப் போயிட்டங்கன்னா 100ரூபா. ஒரு காப்பி தண்ணியவோ டீத்தண்ணியவோ குடிச்சி கிளம்புனாங்கன்னா 200 ரூபா சாப்பிட்டு போங்கன்னு சொன்னா இருந்து சாப்பிட்டு போனாங்கன்னா 500ரூபா. 11ரூபாயோ 21ரூபாயோ சுருள்வச்சு மச்சான்முறை பத்திரிக்கை கொடுத்தாங்கன்னா 1000ரூபா டிரஸ் எடுத்து கொடுத்து அது பூணம் ஷிபான் சேலையா இருந்தா 2000ரூபா பட்டு எடுத்து கொடுத்தாங்கன்னா ஆளப் பொறுத்து அரைப்பவுனோ காப்பவுனோ மோதிரம் போடுறத்துன்னு எங்கம்மா கணக்கே தனியா இருக்கும்.

எங்க ஊருல அரியமுத்து செட்டியாரு கல்யாண மண்டபம் வச்சிருக்காரு. அதுல கல்யாணம் யாரு முடிச்சாலும் அரியமுத்து செட்டியாரு அது டிபனோ சாப்பாடோ அங்கேயே சாப்பிடுவாரு. டிபனுக்கு 20ரூபா மொய். காய்கறி சாப்பாட்டுக்கு 30 ரூபா கறி சாப்பாட்டுக்கு 50 ரூபான்னு அவரு ஒரு கணக்கு வச்சு மொய் எழுதுவாரு. என் கூடப் படிச்ச விக்டர் இப்ப வாத்தியாரு வேலை பாக்கிறான். அவன் கல்யாண வீட்டுல சாப்பிட்டுட்டு சாப்பாடோட ருசியப் பொறுத்துதான் மொய்ய எழுதுவான்.

சிலபேரு கல்யாணத்துக்கு வந்து பேருக்கு ஒரு அஞ்சு நிமிசம் இருந்துட்டு தாலி கட்டுனாங்களா கல்யாணம் முடிஞ்சதான்னே கவலைப்படாமே மொய்ய சம்பந்தபட்டவுங்க பாக்கெட்டுல திணிச்சுட்டு போயிகிட்டே இருப்பாங்க. கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கிறது என்பது தாலி கட்டுற நேரத்துல கரக்டா வந்து பொண்ணயும் மாப்பிளையும் ஆசிர்வாதம் பண்ணனும்ங்கிற மரபெல்லாம் யாரும் கடைப் பிடிக்கிற மாதிரி தெரியல. சில பேரு விசேசக்காரங்கள நேருல கூட பார்த்து வாழ்த்து சொல்ல நேரமில்லாம மொய்ய வேற யாருட்டயாவது கொடுத்து விடுவாங்க. அவங்களோட முக்கிய நோக்கம் மொய் நோட்டுல வரவு வச்சிடம்னா அது கல்யாணத்துக்கு வந்ததுக்கு சமம்ன்னு நினைக்கிறதுதான். அதே மாதிரி ஒரே நேரத்துல ரெண்டு கல்யாணம் நடந்து அதுல ஒரு வீட்டுல காய்கறி சாப்பாடும் இன்னொரு கல்யாணத்துல கறிச் சாப்பாடோ போட்டாங்கன்னா காய்கறி சாப்பாடு போடுற கல்யாணத்துல காலைச் சாப்பாடை சாப்பிட்டுட்டு அவசரம் அவசரமா மொய் எழுதிட்டு கறி சாப்பாட்டு பந்தியில இடத்த பிடிக்க அவசரம் அவசரமா ஓடுவாய்ங்க.

சில கல்யாணத்துல மொய் எழுத வந்தவுங்ககிட்ட மொய்ய வாங்கி அத நோட்டுல எழுதுறாங்க பாருங்க அது பெரிய கஷ்டமான வேலை. தங்கச்சிமடத்துல எங்க சின்னம்மா பையன் கல்யாணத்துக்கு மொய் எழுத என்னை உட்கார சொன்னாங்க. லில்லி பொப்பின்ஸ் செல்வி, தெரசா ஜெயம்மாள் கோனத், டேவிட் அருள் சகாயராஜ், ஸ்டீபன் பால் தேவசகாயம், பெர்னாந்து அருள் சூசைன்னு ஒவ்வொரு பேரும் முழ நீளத்துக்கு இருந்துச்சு. காதுல கேட்டு நோட்டுல எழுதுறதுக்குள்ள கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்.

கரூர்ல ஒரு காண்ட்ராக்டர்கிட்ட வேலை பார்க்கும் போது அவரு எங்க குருப்புல இருந்த பதினைஞ்சு பேருக்கும் பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு அவசியம் வர சொன்னாரு. எவ்வளவு பெரிய மனுசன் பத்திரிக்கை கொடுத்து கூப்புடுராறேன்னு நாங்களும் அடிச்சுப் பிடிச்சு கல்யாணத்துக்கு போனோம். கல்யாண மண்டபத்துக்கு உள்ள நுழையும் முன்னே அவரோட அல்லக்கை ஆளுக்கு ஒரு கவர் கொடுத்து மொய் எழுதுற இடத்துக்கு கூட்டிட்டு போயி எங்க பேருல மொய் எழுத வச்சான். ஒவ்வொரு கவருலயும் பத்தாயிரம் ரூபா இருந்த்துச்சு. அப்பத்தான் புரிஞ்சுச்சு எங்கள மாதிரி ஆளுங்கள வச்சு அவரு கருப்பை வெள்ளையாக்கிட்டாருன்னு.

சில பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இந்த மொய் வரவுதான் கல்யாணம் முடிஞ்சவுடன் மானம் காக்கிற சாமியா இருக்கும். அந்த அளவுக்கு மொய்யில தர்றேன் மொய் வந்தவுடன் தர்றேன் அப்படின்னு சொல்லி கறிக்காரன் காய்கறிகாரன் மேளம் மாலை சமையக்காரர் மண்டபம் வாடகை அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கடன்கள் மொய்யிலதான் அடைப்பாங்க. பார்க்க சில நேரம் பரிதாபமாக இருக்கும். அதுனால என்னோட மொய் அளவு எப்போதும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

எங்கப்பா ஒரு தடவை அவரோட வாத்தியார் நண்பர் மகள் கல்யாணத்துக்கு எனக்கிட்டே 100ரூபா கொடுத்து மொய் எழுதிட்டு வர சொன்னாங்க. கல்யாண வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி என் நண்பனோட ரூமுக்கு போனேன் அங்க 20ரூபா பெட்டு வச்சு நாலு செவன்ஸ் சீட்டு ஆட்டம் ஆடி 80ரூபாயை தோத்துட்டேன். கடைசியில மிஞ்சி இருந்த 20 ரூபாயை வச்சி மொய் எப்படி எழுதுறது. நாள பின்னே வாத்தியார் நோட்டப் பாத்து எங்கப்பாவை தப்பா நினைச்சாருன்னா. ஒரு ஐடியா பண்ணி இருந்த இருபது ரூபாயில 15 ரூபாய்க்கு ஒரு செஸ் போர்டு வாங்கி அத கலர் பேப்பரில சுத்தி ஒரு கிப்ட் பாக்ஸ் மாதிரி ரெடி பண்ணி அதுக்குள்ளே நான் அப்ப சார்ந்திருந்த கட்சியான சி பி ஐ எம் எல் லிபரேசனின் சி பி ஐ எம் எல்லில் சேருங்கள் நோட்டிஸில் இரண்டு வச்சு அதுல பொண்ணு மாப்பிள்ளை பேரையும் எழுதி பேக்கேஜை மாப்பிள்ளை கையில கொடுத்துட்டு பந்தாவா வந்துட்டேன். நாலு நாள் கழிச்சு வாத்தியாரு எங்கப்பாவை பார்த்து ஏண்டா கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணுவியா? அத விட்டுட்டி பொண்ணையும் மாப்பிள்ளையும் நக்சல்பாரி இயக்கத்துல சேர அழைக்கிறியேன்னு சத்தம் போட்டிருக்காரு. வீட்டுக்கு வந்து எங்கப்பா என்னை ஒரு பிடி பிடிச்சு விட்டாரு. அதில இருந்து அந்த வாத்தியாரு இப்பவும் என்னை எங்க பாத்தாலும் முறைப்பாரு. ஒழுங்கா மொய் எழுதியிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?