சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 மார்ச், 2010

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை வரவேற்போம்

உலக மகளிர் தினம் தனது நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடப் போகும் எதிர் வரும் மார்ச்சு திங்கள் 8ம் நாள் இந்திய பாராளுமன்றத்தில் அரசு மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை அரசியல் சட்டத்திருத்தம் 108 மூலம் அமுல்படுத்த இருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக இதோ அதோ என கிடப்பில் போடப்பட்டு இருந்த இந்த சிறப்பான ம்சோதா தற்போது நிறைவேறப் போகிறது.இதன் மூலம் பிற்படுத்தப் பட்டவரை விட, தாழ்த்தப் பட்டவரை விட, மலைஜாதி மக்களைவிட சமூக அநீதி இழைக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு விடிவுகாலம் வர இருக்கிறது.

உலக பொருளாதார மன்றம் 2009 (world economic forum) தனது அறிக்கை ஒன்றில் வளர்ந்த 134 நாடுகளில் சமூகத்தில் பாலியல் சம நிலை இல்லாத நாடுகள்(gender disparity) என்னும் பட்டியலில் இந்தியா 114ஆவது இடத்தினை வகிக்கிறது எனச் சொல்கிறது. இனி அந்த அவப் பெயர் வரப் போவதில்லை.

இந்த மசோதாவிற்கு முன் எப்போது இல்லாத அளவில் பிரதான எதிர்கட்சியான பா.ஜ.கவும் இடது சாரிக் கட்சிகளும் ஆதரவு தர முன் வந்திருக்கின்றன. இது ஒரு பாரட்டத்தக்க ஒரு அம்சம். வழக்கம் போல ராஷ்டிரிய ஜனதா தளமும் சமாஜ்வாடி கட்சியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொன்னாலும், முக்கியமான காரணம் இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் இந்த கட்சிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்காது என்பதே ஒரு காரணம் ஆகும்.

தமிழ்நாட்டில் அதிமுக ஜா ஜெ என பிரிந்து தேர்தலை 1989ல் தேர்தலை சந்தித்தபோது ஜானகி அணியில் சிவாஜி கணேசனுக்கு 50 இடங்கள் வழங்கப்பட்டன. இவ்வளவு பெரிய நடிகருக்கு வெறும் 50 இடங்கள்தானா என ஒருவர் வினவியபோது அப்போதைய ஜா கட்சியின் நிர்வாகி திரு ஆர்.எம். வீரப்பன் கேலியாக குறிப்பிட்டாராம் "முதலில் அவர்கள் 50 வேட்பாளர்களை கண்டு பிடிக்கட்டும் அப்புறம் பார்ப்போம்" என. இது வேடிக்கை என்றாலும் இதே போல ஒரு நிலைமைதான் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் லாலுவுக்கும் முலாயமுக்கும் ஏற்படும். ஏன் எனில் ரவுடிகள் கட்டப் பஞ்சாயத்துக்காரர்கள் குண்டர்கள் யாரும் பெண்களில் இல்லை என்பதே இவர்களின் எதிர்ப்புக்கு காரணம். அரசு இவர்களின் வெற்றுக் கூச்சலுக்கு பயப்படாது இந்த மசோதாவினை நிறைவேற்ற வேண்டும்.

இதுவரை பாராளுமன்றத்தில் 1 0 சதவீதம் மட்டுமே பெண்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என கணக்கெடுப்புகள் சொல்லுகின்றன. அந்த பத்து சதவீதமும் இந்திரா, மீராகுமார் போல் தந்தையாலோ, சோனியாகாந்தி ரப்ரிதேவி போல் கணவனாலோ அல்லது ஜெயலலிதா மாயாவதி போல் ஆண் தலைவர்களால் வளர்க்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த மசோதா நிறைவேற்றப் பட்டால் சுயமாக எந்த ஆணுடைய தயவுமின்றி பெண்கள் தங்களது பங்களிப்பை இந்த நாட்டுக்கு செய்வதற்கு உறுதுனையாக இருக்கும்.

கணவன் கொண்டு வந்து கொடுக்கும் பணத்தில் கட்டும் செட்டுமாக குடும்பம் நடத்தி பிள்ளைகளை படிக்க வைத்து குடும்பத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்லும் நிர்வாகிகள் பெண்கள் அவர்களுக்கு நாட்டை ஆளுவது ஒரு சாதாரன வேலையாகத்தான் இருக்கும்.மேலும் நிர்வாகமும் சுத்தமாக லஞ்ச லாவன்யம் இன்றி கட்டைப் பஞ்சாயத்துகள், கமிசன் இன்றி நேர்மையாக இருக்கும் என நம்பலாம்.

எனவே இந்த மகத்துவமான மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவினை மேல் உள்ள படத்தில் இருக்கும் பெண்களைப் போல் உற்சாகமாக விசிலடித்து வரவேற்போம்.


வெள்ளி, 5 மார்ச், 2010

பரமஹம்ச நித்யாணந்தரும் பத்திரிக்கை தர்மமும்

கடந்த சில நாட்களாக பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சி ஊடகங்களிலும்
தலைப்புச் செய்தியினைப் பிடித்திருப்பவர் சுவாமி பரமஹம்ச நித்யாணந்தர்.


Sting operation என்னும் பெயரில் சாமியாரின் லீலைகள் என நடிகை ரஞ்சிதாவுடன்
நெருக்கமாக இருக்கும் ஒளிக் காட்சி ஒன்றை திரும்ப திரும்ப ஒளிபரப்பி
தமிழ் கூறும் நல்லுலகம் அனைவருக்கும் சேவை செய்திருக்கிறது சன் தொலைக்காட்சி.


சொல்லிவைத்தாற்போல் அனைத்து பத்திரிக்கைகளும் சாமியாரை குறைகூறியும் நடிகை ரஞ்சிதாவின் புகைப்படங்களைப் போட்டும் தங்களது பத்திரிக்கை விற்பனையையும் சன் தொலைக்காட்சி தனது TRP ரேட்டிங்கை உயர்த்திக் காட்டவும் முனைந்திருக்கின்றன.

சிலபேர் சென்னை மாநகர காவல் ஆனையரிடம் சாமியார் தமிழ் கலாச்சாரத்தினை சீர்குலைத்ததாகவும் அவர்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்திருக்கின்றனர்.


அறுசுவை உணவுகளை இலையில் படைத்து அதன் அருகிலேயே ஒரத்தில் சிறிது நரகலை வைத்தால் எவ்வளவு அறுவெறுப்பு வருமோ அதுபோல்தான் இந்த தமிழ் ஊடகங்களும் பத்திரிக்கைகளும் தினமும் செய்தி வெளியிட்டு வருகின்றன.

மானாட மயிலாட, ராணி 6 ராஜா யாரு போன்ற நிகழ்சிகளிலும் அபத்தமான நெடுந்தொடர்களிலும் இவர்கள் கட்டிக் காத்துக் கொண்டிருக்கும் தமிழ் கலாச்சாரத்தினை விடவா சாமியாரின் ஒளிக் காட்சி கலாச்சாரத்தினை சீரழித்து விட்டது.



ரஞ்சிதா நாடோடித் தென்றல், ஜெய்ஹிந்த் போன்ற படங்களில் இதைவிட மோசமாக காட்சி அளித்திருந்தபோது இந்த தமிழ் கலாச்சார காவலர்கள் எங்கு போனார்கள் எனத் தெரியவில்லை.

திரைபடங்களில் கதாநாயகியினை கீழுதட்டுடன் மேலுதடு கடித்து விரகமாக பார்ப்பது பிட்டத்தில் தட்டுவது, தொப்புளில் பம்பரம் விடுவது, உதட்டோடு உதடு கடிப்பது, மார்போடு மார்பு உரசுவது என எத்தனை எத்தனை ஆபாசங்களை இந்த கதாநாயகர்கள் அன்று எம்ஜிஆர் தொடங்கி நேற்று வந்த சிம்பு வரைக்கும் எப்படியெல்லாம் தமிழ் கலாச்சாரத்தினை சீரழிக்கின்றனர். அதை விடவா இந்த சாமியார் செய்து விட்டார்.

தினத்தந்தி நாளிதழை எடுத்துக் கொண்டால் பக்கத்திற்கு பக்கம் கற்பழிப்புச் செய்திகள் கொலைச் செய்திகள். தினமலர் நாளிதழை சொல்ல வேண்டாம்.வாரமலரில் வரும் அன்புடன் அந்தரங்கம் என்னும் ஒரு பகுதியே விருந்து அல்லது மருதம் படித்த நிறைவைத் தரும். தினத்தந்தி குழுமத்தின் வார வெளியீடான ராணியை எடுத்துக் கொண்டால் அட்டைப் படத்தில் மேலே ரஞ்சிதா கொடுத்திருக்கும் தோற்றம் போல்தான் படங்கள் வரும். கீழே குடும்பப் பத்திரிக்கை எனும் தலைப்பு வேறு. பத்திரிக்கையின் மொத்தப் பக்கங்கள் 32ல் 16 பக்கம் ஆணமைக் குறைவு விளம்பரங்கள் போக மீதிப் பக்கங்களில் சினிமா கிசு கிசு நரி விடும் கரடி என பாலியல் செய்திகள் மட்டும் தான் வரும். இது காலம் காலமாக தமிழ் கலாச்சாரத்தினை சீர் கெடுப்பதினை யார் புகார் செய்வது.

இது போக புலனாய்வு இதழ்கள் என்ற பேரில் நக்கீரன் ஜூனியர் விகடன் குமுதம் ரிப்போர்ட்டர் என அனைத்துப் பத்திரிக்கைகளும் பாலியல் செய்திகளுக்கும் கள்ளத்தொடர்பு செய்திகளுக்கும் தான் முன்னுரிமை கொடுத்து செய்தி வெளியிட்டு வருகின்றன.

முதலில் இந்த பத்திரிக்கைகள் தங்கள் முதுகில் உள்ள அழுக்கினை கழுவி விட்டு பின் அடுத்தவர் முதுகினை கழுவ வேண்டும்.

ஒரு தனி மனிதனின் படுக்கையறையினை வேவு பார்த்து அதை மக்களுக்கு சொல்லுவதின் மூலம் இவர்கள் என்ன சாதித்து விட்டார்கள். சாமியாரின் முகத்திரையினை இவர்கள் கிழித்து அதன் மூலம் மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். ஆனால் அதை ஒரு நாகரீகமாக புகைப்படத்தினை வெளியிட்டு சொல்லியிருக்கலாம். ஆனால் பிரைம் டைம் என்னும் நேரத்தில் அனைவரும் பதைபதைக்க ஒளிக்காட்சியினை திரும்ப திரும்ப ஒளி பரப்பியதன் மூலம் சன் தொலைக்காட்சியின் வியாபார நோக்கம் மட்டும் வெளிப்பட்டதே தவிர இவர்களிடம் கிஞ்சித்தும் சமூக விழிப்புணர்வு இல்லை.

ஒரு நல்ல பத்திரிக்கை என்பது எது என ஒரு அறிஞரிடம் கேட்டபோது அவர் சொன்னாராம், "எந்த பத்திரிக்கையில் ஆண்மைக் குறைவு விளம்பரங்கள் வராமல் உள்ளதோ அதுவே சிறந்த பத்திரிக்கை" என கூறினாராம்.இது தற்போது சன் டிவி போன்ற இந்த ஊடகங்களுக்கும் பொருந்தும்.


திங்கள், 8 பிப்ரவரி, 2010

BRMS பட்டப்படிப்பை வரவேற்போம்

கிராமப்புற மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவை அளிக்கும் பொருட்டு BRMS ( Bachelor of Rural Medicine and Surgery) என்னும் மூன்றாண்டு பட்டப் படிப்பை அறிமுகப் படுத்தப் போவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் அறிவித்துள்ளார்.
MBBS படித்து முடித்த மருத்துவர்கள் ஓராண்டு கிராமப்புறங்களில் கட்டாயமாக சேவை செய்ய வேண்டும் என முன்னாள் நடுவன் அரசு சுகாதாரத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமனி அறிவித்த போது மருத்துவர்கள் தரப்பில் அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியின்றி இந்த பட்டப் படிப்பை அறிமுகப் படுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவம் பொறியியல் போன்ற தொழில் கல்வி படித்தோர் படித்து முடித்ததும் குறுகிய காலங்களில் தாங்கள் கல்விக்காக முதலீடு செய்த பணத்தினை எடுக்கும் பொருட்டு நல்லதொரு வேலையினை நகரத்திலோ வெளிநாட்டிலோ தேடிக் கொள்கின்றனரே ஒழிய யாரும் கிராமப் புறங்களில் சேவை செய்யும் நோக்கத்தில் முன்வருவதில்லை. அப்படியே வெகுசிலர் முன் வந்தாலும் கிராம மக்களிடமிருந்து அவர்களுக்கு சரியான வரவேற்பு கிடைப்பதில்லை. காரணம் கிராம மக்களிடம் உள்ள அறியாமை மற்றும் அவர்களின் மிகக் குறைந்த வருமானம்.




MBBS மருத்துவர்கள் சோதனை என்னும் பெயரில் வசூலிக்கும் (Diagnosing Charges) கட்டணங்கள் கிராமப் புற மக்களை குறைந்த செலவில் மருத்துவம் செய்யும் RHMS DHMS என பட்டங்கள் போட்டுக் கொண்டு மருத்துவம் செய்யும் சாலையோர மருத்துவர்களை(Quack doctors) நாட வைக்கிறது.

எனது இராமநாதபுர மாவட்ட கிராமப்புறங்களிலும் இது போன்ற போலி மருத்துவர்கள் (Quack doctors) நிறைய உண்டு. நோய்களுக்கு அவர்கள் அளிக்கும் வித்தியாசமான சிகிச்சை முறைகளை எந்த வித விஞ்ஞானத்திலும் அடக்க முடியாது.


எலும்பு முறிவு ஏற்பட்டால் எம் மக்கள் செல்வது நுடங்கட்டி வலசை என்னும் ஊருக்குத்தான். இங்கு முட்டைப்பத்து என்னும் சிகிச்சை மிகப் பிரபலம். நோயாளியுடன் உதவியாள் ஒருவர் பத்து நாள் தங்கி சிகிச்சை பெற கட்டணம் வெறும் ஆயிரம் மட்டுமே. இதையே நகரில் உள்ள எலும்பு முறிவு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் இரத்த சோதனை யூரின் சோதனை,ECG, X ray , Scan மற்றும் அறைவாடகை மருந்து என குறைந்தது இருபதாயிரம் வேண்டும்.



நாட்பட்ட வயிற்று வலிக்கு மக்கள் செல்வது முதுகுளத்தூருக்கு. இங்குள்ள வைத்தியர் தன்னிடம் உள்ள ஒரு நீண்ட குழாய் ஒன்றை தன் வாயில் வைத்து மறு முனையை நோயாளியின் வாயில் வைத்து உறிஞ்சுகிறார். உடன் ஒரு கருப்பு நிறத்தில் ஒரு திடப் பொருளை எடுத்துக் காட்டி "இதுதான் உன் வயிற்றுக் கோளாறுக்குக் காரணம் இனி எந்த பயமுமில்லை" என வைத்தியம் செய்கிறார். இந்த வைத்தியத்திற்கு பெயர் மாந்தம் எடுப்பது.இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் மட்டுமே. உண்மையில் அந்த திடப் பொருள் நோயாளி வயிற்றில் இருந்ததா அல்லது வைத்தியரின் வாயில் இருந்ததா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.



இதே முதுகுளத்தூரில் இன்னும் ஒரு வைத்தியம் உள்ளது. அது மஞ்சள் காமாலைக்கானது. பொதுவாக கிராமங்களில் மஞ்சள் காமாலை வந்தால் கீழாநெல்லி சாறினை கொடுத்து சரிசெய்யும் வைத்தியர்களை நாடுவதுண்டு. கீழக்கரை இலட்சுமிபுரம் உச்சிப்புளி ரெயில்வே கேட் காரைக்குடி போன்ற இடங்களில் இந்த வகை வைத்தியம் மிகப் பிரபலம். ஆனால் முதுகுளத்தூர் வைத்தியம் இதற்கு மாறுபட்டது. நோயாளி உள் மருந்து உட்கொள்ள தேவையில்லை. நோயாளி வைத்தியரை நேரடியாகப் பார்க்கவும் தேவையில்லை. ஒருவகையான் வேர் ஒன்றை மருத்துவர் தருகிறார். அதை நோயாளிக்கு வேண்டிய நபர் யாரவது வாங்கி வந்து நோயாளியின் கையிலோ அல்லது கழுத்திலோ கட்டி விட்டால் போதும் மஞ்சள் காமாலை குணமாகி விடுகிறதாம்.



எங்கள் ஊர் கீழக்கரையிலும் ஒரு வினோத வைத்தியர் உண்டு அவர் பெயர் டிஸ்கோ ஆலிம்சா. டிஸ்கோ ஆடி குணமாக்குவதில்லை இவர் வியாதிகளை. மாறாக ஒரு குவளை தண்ணீரை மந்திரித்து நோயாளியின் முகத்திலும் தலையிலும் தெளிக்கிறார். இதற்கு இவர் வசூலிப்பது வெறும் முப்பது ரூபாய் மட்டுமே. வெள்ளி செவ்வாய் கிழமைகளில் இங்கு கூட்டம் "எமைக்காத கூட்டம்" என்பார்களே அப்படி ஒரு கூட்டம்.



இதெற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு வைத்தியம். அது மாவட்ட எல்லையான பார்த்திபனூரில். இங்குள்ள சுற்றுப் புற கிராம மக்கள் முதுகு மற்றும் கழுத்து வலி வந்தால் அனுகுவது ஒரு இஸ்லாமிய முதியவரை. நோயாளி அவரது வீட்டுக்கு இரண்டு சிறிய கூழாங்கற்களை எடுத்துச் செல்ல வேண்டும். வீட்டின் முன் நின்று வைத்தியரை அழைக்க வேண்டும். அவர் வந்து "கற்களை கீழேப் போட்டுவிட்டு திரும்பிப் பாராமல் செல்லுங்கள்" என சொல்லுகிறார். அதன் படி செய்தால் முதுகு வலி மற்றும் கழுத்துவலி குணமாகிறது என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. இதற்கு வைத்தியர் கட்டணம் ஏதும் வசூலிப்பதில்லை.



இதெல்லாம் போக "நோய்க்கும் பார் பேய்க்கும் பார்" என்னும் பழமொழி ஒன்று கிராமப் புறங்களில் பிரசித்தம். அதன்படி நோய்க்கு இதுபோல் போலி வைத்தியர்களிடம் வைத்தியம் செய்து கொண்டிருக்கும் போதே கோடாங்கி, குறிசொல்லி,துன்னூறு(திருநீறு)பொடுபவர்,கப்பலோடி முனி, ஒத்தைப்பனை முனி, முக்கு முனி, ஆலிம்சா, தர்கா என பல்வேறு நபர்களையும் துணைக்கழைப்பதுண்டு.



இதெற்கெல்லாம் மூலகாரணம் நகரங்களில் உள்ள மருத்துவமனைகள் வசூலிக்கும் கட்டணங்கள் ஏழை மக்களுக்கு எட்டாக் கனியாக இருப்பதுதான்.காய்ச்சலோ அல்லது தலைவலியோ என வரும் நோயாளிகளிடம் நகர மருத்துவர்கள் தங்களிடம் உள்ள அதி நவீன கருவிகளுக்கு வருமானம் வரும் வகையில் இரத்த சோதனை, சிறுநீர் சோதனை, X RAY , ECG, SCAN, ENDOSCOPY என கறக்கத் தவறுவதில்லை.

சிக்கலான மருத்துவத்திற்கு இவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் சாதாரன காய்ச்சல் தலைவலி அஜீரனக் கோளாறுகளுக்குக் கூட இந்த சோதனைகளை பயன்படுத்துவதால் கிராமப் புற மக்களுக்கு நகர மருத்துவங்கள் நரக மருத்துவங்களாகி விடுகிறது. ஒரு முறை சென்று சூடு கண்ட பூனைகளாகி விட்ட யாரும் வியாதி வந்தால் நகர மருத்துவர்களை நாடுவதில்லை.

அரசு மருத்துவமனைகளின் அவலங்களும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஊழியர்களின் அலட்சியப்போக்கும் அரசு மருத்துவ மனைகளின் நீண்ட வரிசைகளும் கிராமப்புற மக்களை இது போல் முறையற்ற போலி வைத்தியம் செய்பவர்களிடம் செல்ல வைக்கிறது.

எனவே வருமானம் குறைந்த கிராமப் புற மக்களுக்கு BRMS படித்த மருத்துவர்கள் பணியிலமர்த்தப்பட்டால் போலி மருத்துவர்களிடமிருந்து விடுதலையும் அதே நேரத்தில் பாகுபாடற்ற தரமான் சிகிச்சையும் கிடைக்கும். கிராமப் புற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இம் மருத்துவப் படிப்பின் பாடத்திட்டம் அமைய வேண்டும். அதே போல் இவர்களை பணியிலமர்த்தும் கிராமப் புறங்களில் குறைந்த பட்சம் இரத்த சிறுநீர் பரிசோதனைகள் இலவசமாக மக்களுக்கு கிடைக்க அரசு முன் வர வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் இம் மருத்துவர்களுக்கு அமோக வரவேற்பு கிராம மக்களிடமிருந்து கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.





செவ்வாய், 10 நவம்பர், 2009

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை

மூன்று நாட்களுக்கு முன் ஆங்கில நாளிதழான ஹிந்துவில் OPEN PAGE என்னும் தலைப்பில் இனுமெல்லா சசிகலா என்பவர் எழுதிய கட்டுரை இது. படித்ததும் எனக்கு மிகவும் மனது கணத்துப் போனது.இதோ அந்த கட்டுரையின் தமிழாக்கம்.

அம்மா நான் பள்ளி செல்ல விரும்பவில்லை. நான் ஒரு சிறு குழந்தை அம்மா.யாராவது எனக்கு கதைகள் சொன்னால் நன்றாக இருக்கும். பட்டாம் பூச்சிகளும் தலைப்பிரட்டைகளும் என்ன சாப்பிடுகிறது அவை எங்கு தூங்குகிறது என நான் தெரிய ஆசைப்படுகிறேன். மலையின் மேல் ஏறி மேகத்தினைப் பிடித்து அவை எதனால் செய்யப்பட்டிருக்கிறது என அறிய ஆசைப்படுகிறேன். கைகளால் ஓடைநீரை அலசி மீன்கள் நீந்துவதை உணர ஆசைப்படுகிறேன்.

குட்டி செல்ல விலங்குகளுடன் ஓட ஆசைப்படுகிறேன். பறவை போல் கானம் பாட ஆசைப் படுகிறேன். காகிதப் படகு செய்து மழைநீரில் விட்டு விளையாட ஆசைப்படுகிறேன்.மிருதுவான பசும் புல்வெளியில் படுத்து காற்றின் சங்கீதத்தை கேட்க ஆசைப் படுகிறேன்.
இப்படி இவற்றை இயற்கையாக அனுபவித்த பின்னரே இவற்றை பாடங்களில் விளக்கமாக தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா இயற்கையைப் பற்றி என் கற்பனை சிறகுகள் விரிந்து கொண்டிருக்கின்றன.மேலும் மேலும் பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என என் ஆர்வம் மிகுதியாகி கொண்டிருக்கிறது. ஏன் என்னும் விதை என் சிந்தனையில் விதைக்கப் பட்டிருக்கிறது.


ஆனால் அம்மா பொறியில் அகப்பட்ட சிறைக்கைதியைப் போல் நான் வகுப்பறையில் உள்ளேன். எதையாவது கேட்டால் "இதற்கு நேரமில்லை குறிப்பிட்ட காலத்துக்குள் நாம் பாடத்திட்டத்தினை முடிக்க வேண்டும்." என ஆசிரியர்களிடம் ஒரே மாதிரியான பதிலே வருகிறது.
எதையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வெறும் மதிப்பெண்களுக்காக மட்டும் படிக்கும் இந்த படிப்பு மிகவும் அயர்ச்சியைத் தருகிறது.

அம்மா நான் உயிர் காட்சி சாலைகளுக்கு வகுப்புத் தோழர்களுடன் சென்று அங்குள்ளவற்றை ஆசிரியர் விளக்க தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
இயற்கை சுற்றுலாக்கள் சென்று இயற்கையான உயிரியல் வகுப்பைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
ஆழ்கடலில் வசிக்கும் விலங்குகள் பற்றியும் எரிமலைகள் பற்றியும் ஒளிக்காட்சிகள் மூலம் தெரிந்து கொள்ள ஆசைப் படுகிறேன்.
என் நகரத்தில் உள்ள எல்லா பள்ளி மாணவர்களும் சேர்ந்து என் நகரத்தில் உள்ள வரலாற்று சின்னங்களைப் பற்றி நேரில் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
தொலை நோக்கி மூலம் வானவியலைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
பாடப் புத்தகங்களில் மட்டும் நான் இவற்றை தெரிந்து கொள்ள விரும்பவில்லை அம்மா. கண்டு கேட்டு தொட்டு முகர்ந்து சுவைத்து நான் அறிய ஆசைப்படுகிறேன் நான் விரும்புவது படிப்பு அல்ல அனுபவம்.

ஏன் இந்த பள்ளிகள் இது போன்ற அனுபவத்தை வருடம் ஒருமுறை ஏற்பாடு செய்யக்கூடாது.

மேலும் அம்மா இனிமேலும் என்னால் பள்ளிப்புத்தகப் பையினைத் தூக்கி வளைய முடியாது. ஏற்கனவே என் முதுகு வளையும் அபாயத்தில் உள்ளது. ஏன் எல்லாப் புத்தகங்களையும் எல்லா நாளிலும் நான் தூக்கிச் செல்ல வேண்டும். ஏன் ஒருநாளைக்கு இரண்டு பாடம் மட்டும் படிக்கக் கூடாது.ஏன் மேலை நாடுகளில் உள்ளது போல் வகுப்பறை மேஜைகளில் லாக்கர் வசதி செய்யக் கூடாது. ஏன் தினமும் ஆட்டோக்களில் நெரிசல்களில் பிதுங்கி சிரமப்பட வேண்டும்.


தினமும் வீட்டுப்பாடம் விண்டர் புராஜக்ட், சம்மர் கிளாஸ் வீக்லி டெஸ்ட். காலாண்டு பரிட்சை. அரையாண்டு பரிட்சை. மிட் டெர்ம் டெஸ்ட் முழு ஆண்டுப் பரிட்சை வீக்லி டெஸ்ட் கோச்சிங் கிளாஸ் சிறப்பு வகுப்புகள் என மேலும் மேலும் தேர்வுகள். அழுத்தம் அழுத்தம் பேரழுத்தம்.
எப்போது நான் சுதந்திரமாக பாட ஆட படம் வரைய நீந்த சைக்கிள் ஒட்ட விளையாட முடியும்.
எப்போது நான் கிரிக்கெட்டோ அல்லது கள்ளன் போலிசோ என எனக்குப் பிடித்த விளையாட்டை விளையாட முடியும்.
எப்போது நான் குழந்தைகளுக்கே தேவைப்படும் குறைந்தபட்ச தூக்கத்தினை தூங்க முடியும். ஏன் நான் தினம் தினம் படி படி என சொல்லப் பட வேண்டும்.
அம்மா நான் தற்போது டாக்டராகவோ இஞ்சினியராகவோ வேறு எதுவாகவும் ஆக விரும்பவில்லை. நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். எனது அறிவினை பாதுகாப்பாக அழுத்தம் எதுவும் இன்றி தெளிவாக கற்றுக் கொள்ள ஆசைப் படுகிறேன். அம்மா நான் குழந்தைப் பருவத்தினை அனுபவிக்க ஆசைப்படுகிறேன்.
இப்படி அந்த கட்டுரை முடிகிறது.
மெக்காலேயின் வெறும் கிளர்க்குகளை உருவாக்கும் இந்த கல்வித்திட்டத்தினால் பிஞ்சுகள் எப்படிப் பாதிக்கப் படுகின்றன என நினைக்கும் போது கண்கள் பனிக்காமல் இல்லை.
பட்டம் விட்டு பம்பரம் குத்தி கிணற்றில் குதித்து நீந்தி கிட்டிப் புல் விளையாண்டு, கபடி விளையாண்டு தட்டான் பிடித்து பேய்கதைகள் கேட்டு இப்படி சென்ற தலைமுறையில் நாம் அனுபவித்த குழந்தைப் பருவம் இன்று கோச்சிங் கிளாஸ் கராத்தே கிளாஸ் டான்ஸ் கிளாஸ் என வகுப்புகளிலும் தேர்வுகளிலும் indoor games ஆக சுருங்கி விட்ட அவலத்தினை என்ன சொல்வது.