அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 அக்டோபர், 2013

நாயின் வாயைக் கட்டினோம்


கீழக்கரையில் ஒரு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஒன்று இருக்கும். அந்த வகையில் நான் ஹமீதியா மேனிலைப் பள்ளியில் பத்தாவது படிக்கும் போது ஐந்து வருத்தப்படாத வாலிபர்கள் இருந்தோம். ஹமீதியா பள்ளியின் ஆசிரியர் ஓ எஸ் அப்துல் ரஹ்மான் அவர்களின் புதல்வர் ஜாபர் அலி அந்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர். புலவர் முஸ்தபாவின் மருமகன் செய்யது ஹமிது சுல்தான் சங்கத்தின் பொருளாளர். (இவர்கிட்டதான் அப்ப காசு இருக்கும்) சிட்டி கன்சல்டண்ட் பொறியாளர் ஆசாத் ஹமித் நான் கீழக்கரை நூலகர் திரு அழகுமலை மகன் பொறியாளர் மீனாட்சி சுந்தரம் இவர்கள் உறுப்பினர்கள்.

சங்கக் கூட்டம் கடற்கரையில்தான் நடக்கும் அலை அடிக்காமல் இருந்தால் ஐந்தாம் பாலத்திலும் அலை ரொம்ப அடித்தால் கஸ்டம்ஸ் ஆபிஸின் சரிவு சுவரிலும் நடக்கும். அப்சரா தியேட்டருக்கு எதிரில் ஒரு பெட்டிக்கடையில் சுண்டல் விற்பார்கள் அதை ஆளுக்கொரு பொட்டலம் வாங்கி பாலத்தில் வந்து உட்கார்ந்தோம் என்றால் கஸ்டம்ஸ்காரர்கள் வந்து திட்டும் வரை பேசிக் கொண்டிருப்போம். சில நேரம் பாலத்திலிருந்து செருப்பை கடலில் வீசுவது பின் அது கரை ஒதுங்கினால் கரையில் போய் எடுத்துக் கொளவது கரையில் ஒதுங்காமல் கடல் அலையில் அடித்துச் சென்றால் சட்டையைக் கழட்டி பாலத்தில் போட்டு விட்டு நீந்தி போய் அந்த செருப்பைப் போய் எடுப்பது என சாகசமெல்லாம் செய்து கொண்டிருந்தோம்.

அப்போது கடற்கரையில் ஒரு பெட்ரோல் பேங்க் இருந்த்தது. மீனவர்களுக்காக டீசல் மட்டும் வியாபாரம். அந்த் பங்கில் ஒரு வெள்ளை நாய் ஒன்று கட்டப் பட்டிருக்கும் அந்த நாய் எங்களைப் பார்த்தால் மட்டும் அப்படி ஒரு குரை குரைக்கும். இதில் கோபமடைந்த எங்கள் சங்கத் தலைவர் அந்த நாயை என்ன செய்யலாம் என ஆராய்சியில் இறங்கினார். மீனாட்சி சுந்தரம் ஒரு ஆலோசனை சொன்னார் நூலகத்தில் நாயின் வாயைக் கட்ட மணீமேகலை பிரசுரம் புத்தகம் ஒன்றை பார்த்ததாகவும் அந்த புத்தகத்தில் உள்ள மந்திரத்தை செபித்து அந்த நாயின் வாயைக் கட்டலாம் என அரிய ஆலோசனை வழங்கினார்.

சொன்னபடியே அந்த புத்தகத்தினை கடற்கரைக்கு கொண்டு வந்தார், அதில் குரைத்து வரும் நாயின் வாயைக் கட்ட, நமது காலடி மண்ணை எடுத்து, நீலி, சூலி, ஆகாச பாலி,கட்டு ஓம் நன்றாகக் கட்டு கட்டு எனக் கூறி நாய் முன் வீசினால் நாய் குரைக்க இயலாது என குறிக்கப்பட்டிருந்தது. இந்த மந்திரத்தினை நாய் முன் செபித்து அதன் வாயைக் கட்டும் மிகப் பெரிய பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது.ஏன் எனில் எனக்கு மனப்பாட சக்தி அதிகம் என சங்கத் தலைவர் நம்பியிருந்தார்.

ரொம்ப பாதுகாப்பாக நாயைக் கட்டியிருந்த இடத்தில் இருந்து நாற்பதடி தூரத்தில் நின்று கொண்டு காலடி மண்ணை எடுத்து மந்திரத்தினை ஓதி நாயை நோக்கி எறிந்தோம். காலடி மண்ணில் ஒரு கல் இருந்திருக்கும் போலிருக்கிறது. அடிபட்ட நாய் முன்னை விட வள் வள் என குலைக்க ஆரம்பித்தது. கோபமடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர் நாயை அவிழ்த்து விட்டார். இப்போது ஐஸ் கம்பெனியை நோக்கி நாய்க்கும் எங்கள் ஐந்து பேருக்கும் ஒட்டப் பந்தயம் நடக்க ஆரம்பித்தது. நானும் மீனாட்சி சுந்தரமும் பின்னாங்கால் பிடறிபட ஐஸ் கம்பெனியிலிருந்து மீன் மார்க்கெட்டு செல்லும் வலதுப் பக்க பாதையில் ஓடி விட்டோம் சங்கத் தலைவர் இடது பக்கத்தில் கடற்கரைக்கு செல்லும் பாதையில் ஓடி விட்டார். மாட்டிக் கொண்டது ஆசாத்தும் சுல்தானும் ஆசாத் சற்றே உயரமானவர் என்பதால் ஐஸ் கம்பெனி ஓரத்திலிருந்த கருவேல் மரத்தின் கிளையினைப் பிடித்து ஐஸ் கம்பெனி காம்பவுண்ட் சுவரில் ஏறி விட்டார் நாய் இப்போது சுல்தானை பார்த்து முறைக்க தொடங்கியது.

காக்கா உடனே ஒரு காரியம் செய்தார். நாயைக் கட்டும் மந்திரம் உள்ள மணிமேகலைப் பிரசுர புத்தகம் அவர் கையில்தான் இருந்தது. அதை வைத்து நாயின் வாயை நோக்கி ஓங்கி அடித்தார். அவ்வளவுதான் நாய் பின்னங்கால் பிடறிபட திரும்பி பெட்ரோல் பங்க் சென்று விட்டது.


அதற்கு பின்னால் எங்களைப் பார்த்து அது குரைப்பதில்லை. மந்திரத்தினால் பயனில்லை என்றாலும் மந்திரப் புத்தகம் நாயின் வாயைக் கட்டி விட்டது.




வியாழன், 6 ஜூன், 2013

மொய்




திருமணம் முடிந்தவுடன் நல்லா சாப்பிட்டுவிட்டு மொய் எழுதுற பழக்கத்தினை யார் ஆரம்பிச்சிருப்பாங்கன்னு தெரியல. கண்டிப்பா அந்த காலத்தில விசேசம் நடத்துனவுங்க வாயைத்திறந்து கேட்டிருக்க மாட்டாங்க. ஆனா யாராவது ஏழை எளியவுங்க கல்யாணத்துக்கு போன நாலு பெரிய மனுசனுங்க விசேசக்காரர் குறிப்பா பொண்னு வீட்டுக்காரங்க நல்லா இருக்கனுமுனு நினைச்சு நாலு காச கொடுத்திருப்பாங்கன்னு நினைக்கிறேன் அதுவே காலப் போக்கில நோட்டு போட்டு எழுதுற அளவுக்கு வாடிக்கை ஆயிருச்சு போல இருக்கு.

எங்க வீட்டு பீரோவுல எங்கம்மா ஒரு ஏழெட்டு மொய் நோட்டு வச்சிருக்காங்க. எல்லாம் எங்க அண்ணன் தம்பி அக்கா தங்கசிங்க கல்யாணத்துக்கு வந்த மொய் நோட்டுதான். யாராவது சொந்தக்காரங்க பத்திரிக்கை கொடுத்தாப் போதும். அவுங்க போன பின்னே கடைசியா நடந்த எங்க வீட்டு கல்யாணத்தில அவுங்க எவ்வளவு மொய் எழுதினாங்கன்னு எங்கம்மா அந்த நோட்டுல ரெஃபர் பண்ணிட்டுதான் பத்திரிக்கை வச்சவுங்களுக்கு எவ்வளவு மொய் எழுதனும்ன்னு முடிவு பண்ணுவாங்க. சில பேரு எவ்வளவு எழுதினாங்கன்னு எங்கம்மா மனப்பாடமா நினைவு வச்சிருப்பாங்க. ”சண்முகம் முத கல்யாணம் இப்பத்தான் பண்ணுறான் ஏற்கனவே நமக்கு அஞ்சு விசேசத்தில நூறு நூறு ரூபா எழுதியிருக்கான் அதனால அவனுக்கு ஒரு முன்னூறு ரூபா எழுதுவோம் அடுத்து ஒரு பையன் வச்சிருக்கான்ல அவனுக்குப் பாக்கி இருநூறு ரூபாயை எழுதுவோம்ன்னு கணக்கா பேசுவாங்க”.

அதே மாதிரி கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தவுங்க அவுங்க நடந்துக்கிற அல்லது செய்முறையைப் பொறுத்து எங்கம்மாவோட மொய் அளவு மாறும். வந்தவுடனே வெந்நித்தண்ணியை காலில ஊத்துன மாதிரி கிளம்பிப் போயிட்டங்கன்னா 100ரூபா. ஒரு காப்பி தண்ணியவோ டீத்தண்ணியவோ குடிச்சி கிளம்புனாங்கன்னா 200 ரூபா சாப்பிட்டு போங்கன்னு சொன்னா இருந்து சாப்பிட்டு போனாங்கன்னா 500ரூபா. 11ரூபாயோ 21ரூபாயோ சுருள்வச்சு மச்சான்முறை பத்திரிக்கை கொடுத்தாங்கன்னா 1000ரூபா டிரஸ் எடுத்து கொடுத்து அது பூணம் ஷிபான் சேலையா இருந்தா 2000ரூபா பட்டு எடுத்து கொடுத்தாங்கன்னா ஆளப் பொறுத்து அரைப்பவுனோ காப்பவுனோ மோதிரம் போடுறத்துன்னு எங்கம்மா கணக்கே தனியா இருக்கும்.

எங்க ஊருல அரியமுத்து செட்டியாரு கல்யாண மண்டபம் வச்சிருக்காரு. அதுல கல்யாணம் யாரு முடிச்சாலும் அரியமுத்து செட்டியாரு அது டிபனோ சாப்பாடோ அங்கேயே சாப்பிடுவாரு. டிபனுக்கு 20ரூபா மொய். காய்கறி சாப்பாட்டுக்கு 30 ரூபா கறி சாப்பாட்டுக்கு 50 ரூபான்னு அவரு ஒரு கணக்கு வச்சு மொய் எழுதுவாரு. என் கூடப் படிச்ச விக்டர் இப்ப வாத்தியாரு வேலை பாக்கிறான். அவன் கல்யாண வீட்டுல சாப்பிட்டுட்டு சாப்பாடோட ருசியப் பொறுத்துதான் மொய்ய எழுதுவான்.

சிலபேரு கல்யாணத்துக்கு வந்து பேருக்கு ஒரு அஞ்சு நிமிசம் இருந்துட்டு தாலி கட்டுனாங்களா கல்யாணம் முடிஞ்சதான்னே கவலைப்படாமே மொய்ய சம்பந்தபட்டவுங்க பாக்கெட்டுல திணிச்சுட்டு போயிகிட்டே இருப்பாங்க. கல்யாணத்துக்கு பத்திரிக்கை கொடுக்கிறது என்பது தாலி கட்டுற நேரத்துல கரக்டா வந்து பொண்ணயும் மாப்பிளையும் ஆசிர்வாதம் பண்ணனும்ங்கிற மரபெல்லாம் யாரும் கடைப் பிடிக்கிற மாதிரி தெரியல. சில பேரு விசேசக்காரங்கள நேருல கூட பார்த்து வாழ்த்து சொல்ல நேரமில்லாம மொய்ய வேற யாருட்டயாவது கொடுத்து விடுவாங்க. அவங்களோட முக்கிய நோக்கம் மொய் நோட்டுல வரவு வச்சிடம்னா அது கல்யாணத்துக்கு வந்ததுக்கு சமம்ன்னு நினைக்கிறதுதான். அதே மாதிரி ஒரே நேரத்துல ரெண்டு கல்யாணம் நடந்து அதுல ஒரு வீட்டுல காய்கறி சாப்பாடும் இன்னொரு கல்யாணத்துல கறிச் சாப்பாடோ போட்டாங்கன்னா காய்கறி சாப்பாடு போடுற கல்யாணத்துல காலைச் சாப்பாடை சாப்பிட்டுட்டு அவசரம் அவசரமா மொய் எழுதிட்டு கறி சாப்பாட்டு பந்தியில இடத்த பிடிக்க அவசரம் அவசரமா ஓடுவாய்ங்க.

சில கல்யாணத்துல மொய் எழுத வந்தவுங்ககிட்ட மொய்ய வாங்கி அத நோட்டுல எழுதுறாங்க பாருங்க அது பெரிய கஷ்டமான வேலை. தங்கச்சிமடத்துல எங்க சின்னம்மா பையன் கல்யாணத்துக்கு மொய் எழுத என்னை உட்கார சொன்னாங்க. லில்லி பொப்பின்ஸ் செல்வி, தெரசா ஜெயம்மாள் கோனத், டேவிட் அருள் சகாயராஜ், ஸ்டீபன் பால் தேவசகாயம், பெர்னாந்து அருள் சூசைன்னு ஒவ்வொரு பேரும் முழ நீளத்துக்கு இருந்துச்சு. காதுல கேட்டு நோட்டுல எழுதுறதுக்குள்ள கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்.

கரூர்ல ஒரு காண்ட்ராக்டர்கிட்ட வேலை பார்க்கும் போது அவரு எங்க குருப்புல இருந்த பதினைஞ்சு பேருக்கும் பத்திரிக்கை கொடுத்து கல்யாணத்துக்கு அவசியம் வர சொன்னாரு. எவ்வளவு பெரிய மனுசன் பத்திரிக்கை கொடுத்து கூப்புடுராறேன்னு நாங்களும் அடிச்சுப் பிடிச்சு கல்யாணத்துக்கு போனோம். கல்யாண மண்டபத்துக்கு உள்ள நுழையும் முன்னே அவரோட அல்லக்கை ஆளுக்கு ஒரு கவர் கொடுத்து மொய் எழுதுற இடத்துக்கு கூட்டிட்டு போயி எங்க பேருல மொய் எழுத வச்சான். ஒவ்வொரு கவருலயும் பத்தாயிரம் ரூபா இருந்த்துச்சு. அப்பத்தான் புரிஞ்சுச்சு எங்கள மாதிரி ஆளுங்கள வச்சு அவரு கருப்பை வெள்ளையாக்கிட்டாருன்னு.

சில பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இந்த மொய் வரவுதான் கல்யாணம் முடிஞ்சவுடன் மானம் காக்கிற சாமியா இருக்கும். அந்த அளவுக்கு மொய்யில தர்றேன் மொய் வந்தவுடன் தர்றேன் அப்படின்னு சொல்லி கறிக்காரன் காய்கறிகாரன் மேளம் மாலை சமையக்காரர் மண்டபம் வாடகை அப்படி இப்படின்னு ஏகப்பட்ட கடன்கள் மொய்யிலதான் அடைப்பாங்க. பார்க்க சில நேரம் பரிதாபமாக இருக்கும். அதுனால என்னோட மொய் அளவு எப்போதும் பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

எங்கப்பா ஒரு தடவை அவரோட வாத்தியார் நண்பர் மகள் கல்யாணத்துக்கு எனக்கிட்டே 100ரூபா கொடுத்து மொய் எழுதிட்டு வர சொன்னாங்க. கல்யாண வீட்டுக்கு போறதுக்கு முன்னாடி என் நண்பனோட ரூமுக்கு போனேன் அங்க 20ரூபா பெட்டு வச்சு நாலு செவன்ஸ் சீட்டு ஆட்டம் ஆடி 80ரூபாயை தோத்துட்டேன். கடைசியில மிஞ்சி இருந்த 20 ரூபாயை வச்சி மொய் எப்படி எழுதுறது. நாள பின்னே வாத்தியார் நோட்டப் பாத்து எங்கப்பாவை தப்பா நினைச்சாருன்னா. ஒரு ஐடியா பண்ணி இருந்த இருபது ரூபாயில 15 ரூபாய்க்கு ஒரு செஸ் போர்டு வாங்கி அத கலர் பேப்பரில சுத்தி ஒரு கிப்ட் பாக்ஸ் மாதிரி ரெடி பண்ணி அதுக்குள்ளே நான் அப்ப சார்ந்திருந்த கட்சியான சி பி ஐ எம் எல் லிபரேசனின் சி பி ஐ எம் எல்லில் சேருங்கள் நோட்டிஸில் இரண்டு வச்சு அதுல பொண்ணு மாப்பிள்ளை பேரையும் எழுதி பேக்கேஜை மாப்பிள்ளை கையில கொடுத்துட்டு பந்தாவா வந்துட்டேன். நாலு நாள் கழிச்சு வாத்தியாரு எங்கப்பாவை பார்த்து ஏண்டா கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணுவியா? அத விட்டுட்டி பொண்ணையும் மாப்பிள்ளையும் நக்சல்பாரி இயக்கத்துல சேர அழைக்கிறியேன்னு சத்தம் போட்டிருக்காரு. வீட்டுக்கு வந்து எங்கப்பா என்னை ஒரு பிடி பிடிச்சு விட்டாரு. அதில இருந்து அந்த வாத்தியாரு இப்பவும் என்னை எங்க பாத்தாலும் முறைப்பாரு. ஒழுங்கா மொய் எழுதியிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?






திங்கள், 28 மார்ச், 2011

தேருபோல காரு ஓட்டி


நேற்று நிறுவனத்தில் எனக்கு புதியதொரு வாகனம் வழங்கப்பட்டது. பொறியாளர் பணியில் வாகனம் மிக அத்தியாவசியமான ஒன்று. ஆய்வுகளுக்கும் வேலை குளறுபடிகளைத் தீர்க்கவும் எந்த நேரத்திலும் பயணம் செய்ய தயாராக இருக்க வேண்டும். வாகனச் சாவியை வழங்கும் போது நிறுவன பொது மேலாளர் எனது வாகனம் ஓட்டும் திறமை குறித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார் (வாய்க்காலில் ஒரு நாள் விழுந்த கதை அவருக்குத் தெரியாது பாவம்)

எனது வாகனம் ஓட்டும் இப்போதைய நிலைக்கும் நான்கு வருடம் முந்திய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சற்றே ஒரு கொசுவர்த்தி ஏற்றி வைத்து பின்னோக்கி சென்றேன்.

வாகனம் பற்றிய எந்த அடிப்படை அறிவும் இல்லாத நிலையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் சென்னையில் ஒரு நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன். எனது சான்றிதழ்களைப் பார்த்து திருப்தி அடைந்த பிலிப்பினோ அதிகாரி இறுதியாக ‘உனக்கு வாகனம் ஓட்டத்தெரியுமா? என வினவினார்.

எங்கே தெரியவில்லை என்றால் நிராகரித்து விடுவாரோ என்ற அச்சத்திலும் எப்படியும் விசா போன்ற சம்பிராதயங்கள் முடிய ஓரிரு மாதங்கள் ஆகும் என்ற நம்பிக்கையிலும் கூசாமல் தெரியும் என பொய் பகர்ந்தேன்.சரி வரும்போது உனது இந்திய ஓட்டுனர் உரிமத்தினை கொண்டு வாஎன என்னைத் தேர்வு செய்தார் அந்த அதிகாரி.

ஊருக்கு சென்ற மறுநாளே எங்களது ஊரில் ஓட்டுனர் பள்ளி நடத்திவந்த ஒரு தம்பியை அணுகினேன். தம்பி என்று குறிப்பிடக் காரணம் அவர் நான் கல்லூரியில் பயின்றபோது பாலர் பள்ளியில் பயின்று கொண்டிருந்தார்.

LLR சான்றிதழ் வாங்கியபின்னால் ஒட்டுனர் பயிற்சி ஆரம்பமாகியது. என்னுடன் சேர்த்து எட்டுப் பேர் கீழக்கரைக்கும் இராமநாதபுரத்துக்கும் இடையில் உள்ள சாலையே பயிற்சிக் களம். மொத்தம் 16 கீமி ஒவ்வொருவருக்கும் நான்கு நான்கு கீ மீட்டராக பயிற்சி வழங்கினார். எனது முறை வந்தபோது கியர்களைப் பற்றி விளக்கிய தம்பி முதல் கியரைப் போட்டு வண்டியை எடுக்கச் சொன்னார். கியரைப் போட்டதும் வண்டி படுத்து விட்டது. “கிளட்சை மெதுவா விட்டுகிட்டே ஆக்சிலேட்டரை அழுத்துங்கண்ணேஎன்று மரியாதையாக பேசிய தம்பி தொடர்ந்து நான்கைந்து தடவை வண்டியை எடுக்க முடியாமல் போகவும் “என்னய்யா மெதுவா விடு மெதுவா விடுன்னு சொல்றேன்லஎன மரியாதையைக் குறைத்தார்.

ஒரு வழியாக சமாளித்து வண்டியை எடுத்த பின்னர் பிடிமானம் இல்லாமல் அங்கும் இங்கும் அலைய மறுபடியும் தம்பி ஒருமையில் அர்ச்சித்தார். ஓரளவு நிதானம் வந்து ஓட்ட ஆரம்பிக்கையில் போதும் உங்க 4 கீமீ கோட்டா முடிந்து விட்டது மீதியை நாளைக்கு பார்க்கலாம் எனக் கூறினார் தம்பி.

இதுபோல் தினமும் பயிற்சி எடுத்தப் பின்னர் ஒரு மாதம் கழித்து எட்டு போட வேளை வந்தது.எட்டும் ஒரு உதறலோடுதான் முடிந்தது. எனது ஓட்டுதலைப் பார்த்து உதடு பிதுக்கிய பிரேக் இன்ஸ்பெக்டர் தம்பியைக் கூப்பிட்டு காதைக் கடித்தார். எனைத் தனியே அழைத்த தம்பிஎன்னண்ணே இப்படி சொதப்புறிங்க உங்களை பாஸ் செய்யனும்னா தனியா 500 கொடுக்கனுமாம் இல்லைன்னா மறுபடி பயிற்சி எடுத்துட்டு வரச் சொல்லுறாரு எப்படி உங்க வசதின்னு தம்பி கேட்டார். எனக்கோ விசா வந்து விட்டது. ஓட்டுனர் உரிமம் ஒன்றுதான் பாக்கி. டக்குன்னு காந்தி நோட்டை தூக்கிப் போட்டுட்டேன். அடுத்த வாரத்திலேயே சவுதியும் வந்து சேர்ந்துட்டேன்.

சவுதி வந்ததும் இக்காமா (சவுதி உறைவிட உரிமம்) வர 1 மாதம் தாமதமானது. இந்த காலத்தில் நிறுவனத்தில் உள்ள ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு முகாமின் எதிரே ஆளில்லாத சாலை ஒன்றில் தினமும் பயிற்சி எடுத்து வந்தேன். ஒரு நாள் பயிற்சி எடுக்கும் போது அங்கு டிரய்லர் ஒன்றை நிறுத்தி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பாகிஸ்தான் ஓட்டுனர் ஒருவர் ‘என்னப்பா விசயம் குறுக்க நெடுக்க ஓட்டிட்டு இருக்கியே?ன்னார். நான் பயிற்சி எடுப்பதாக கூறினேன். ஊரில வண்டி ஓட்டியிருக்கியா?ன்னு கேட்டார். ஆமா நான் மாருதி கார் ஓட்டியிருக்கேன்னு ஒரு டுபாக்கூர் விட்டேன். அதுக்கு அவர் சொன்னார் நீ இதுக்கு முன்னாடி எந்த வண்டியையும் ஓட்டியிருக்க மாட்டேன்னார். உடனே நான் எனது இந்திய ஓட்டுனர் உரிமத்தை எடுத்துக் காட்டினேன். அதுக்கு அவர் சொன்னார் ‘லைசன்ஸ் கல்லிவெல்லி காசு கொடுத்தா இதுபோல ஆயிரம் லைசன்ஸ் கிடைக்கும்ன்னு சொல்லிட்டு நீ வண்டி ஓட்டுவே ஆனா பாஸ் ஆகிறதுக்கு நாள் ஆகும்ன்னு அருளாசி வழங்கினார்.

இக்காமா வந்ததும் முறையான ஆவணங்களோடு கண் பரிசோதனை முடித்து எனது நிறுவன சவுதி மக்கள் தொடர்பு அதிகாரி என்னை அல்ஹாசா மாவட்ட ஓட்டுனர் பள்ளிக்கு தேர்வுக்கு அழைத்துச் சென்றார்.

‘சாதிக் வண்டியில் உட்கார்ந்ததும் மறக்காம் சீட் பெல்டை போட்டுக்க, கண்ணாடி எல்லாம் சரியா இருக்கான்னு பாத்துக்க ஏன்னா காரில கண்ணாடிதான் ஓட்டுனருக்கு மூனாவது கண்மாதிரி அப்புறம் கிளட்சை மிதித்து கியர் நீயுட்ரல்ல இருக்கான்னு செக் பண்ணிக்க போலிஸ்காரர் போன்னு சொன்னப்புறம்தான் வண்டி எடுக்கனும். வண்டியை எந்தப் பக்கம் திருப்பினாலும் அதுக்கேத்த மாதிரி இண்டிகேட்டர் லைட்டைப் போட்டுக்க பாஸ் பண்ணிட்டேன்னா கம்ப்யூட்டர்ல ஒரு டெஸ்ட் வரும் உனக்கு இங்கிலிசு தெரியும் கம்ப்யூட்டரும் தெரியும் அதுனால் அது ஒன்னும் பிரச்சினையில்ல ஆல் தி பெஸ்ட்ன்னு ஆசி வழங்கி பள்ளியில் இறக்கி விட்டுட்டுப் போனார்.

முதல்ல சிக்னல் பத்தி அரைமணிநேரம் மன்னாகே பண்னாகேன்னு வகுப்பு எடுத்தாங்க. அதுக்கப்புறம் வரிசையா உட்கார வச்சு ஒவ்வொருத்தரா போலிஸ் கூப்பிட்டார். எனது முறை வந்தது. கந்த சஷ்டி கவசமெல்லாம் சொல்லி தயாரா இருந்த நான் அப்பன் முருகன் மேல பாரத்தப் போட்டுட்டு ஓட்டுனர் சீட்டில் உட்கார்ந்தேன். என்னுடைய இக்காமவை வாங்கிப் பார்த்த அதிகாரி “நீ மெகந்திசா (பொறியாளரா)ன்னு கேட்டார். ஆமாம்ன்னு சொல்லிட்டு சீட் பெல்டைப் போட்டு கண்ணாடிய ஒரு தடவை பார்த்துட்டு கிளட்சை செக் பண்ணிட்டு வண்டி சாவியைப் போடுறேன் வண்டி ஸ்டார்ட் ஆகல. என்னை ஒரு மாதிரியாப் பார்த்த அதிகாரி கிளட்சை அழுத்திகிட்டே சாவியைப் போடுன்னார். இது என்ன புதுசா இருக்கேன்னு அவர் சொன்ன மாதிரியே செஞ்சேன். வண்டி ஸ்டார்ட் ஆகி விட்டது. ம் போ என்று சொன்னார் அதிகாரி ஆக்சிலேட்டரை கொடுத்தா வண்டி உறுமுது ஆனா கிளம்பல. இந்த முறை தலையில் அடித்துக் கொண்ட அதிகாரி சொன்னார் “யேய் மெகந்திஸ் கியரைப் போடுன்னார்

ஆஹா இவ்வளவு நேரம் கியர் போடமலா வண்டி ஓட்டினோம் என நினைத்துக் கொண்டே கியரைப் போட்டேன். ஊருல நடந்தது மாதிரி வண்டி படுத்து விட்டது.

“சரி இறங்கு போய் கம்ப்யூட்டர் டெஸ்டுக்குப் போன்னு சொன்னார் அதிகாரி. அவ்வளவுதானா தேர்வு முடிந்ததா என்று குழப்பத்துடன் கம்ப்யூட்டர் தேர்வுக்கு சென்றேன். அங்கு மிக எளிதான கேள்விகள் 20 கேள்விகளுக்கு அடுத்தடுத்து விடை தெரிவு செய்யவும் கம்ப்யூட்டரிலேயே நீங்கள் வெற்றி பெற்றீர்கள்என செய்தி வேறு வந்தது. சரிதான் நம்மதான் மெகந்திசாச்சே அதுனால டெஸ்டெல்லாம் நமக்குக் கிடையாது போலன்னு நினைச்சுட்டு நிறுவனம் வந்தடைந்தேன். மாலைவேளையில் வந்த PRO சொன்னார். உனக்கு ஒரு மாதம் பயிற்சி தேவைப்படுகிறது என போலிஸ் குறிப்பெழுதி உள்ளார். அதனால் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியில் தினமும் பயிற்சி எடுத்து பின்னர் ஒரு மாதம் கழித்து சோதனை செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

மறுபடியும் பயிற்சி. இந்த பயிற்சி தந்த தைரியத்தில் ஒரு நாள் வண்டி எடுத்துக் கொண்டு ஒரு கடை வரை சென்றேன். கடை முன் வண்டியை நிறுத்தி விட்டு ஒரு பெப்சி வாங்கி திரும்பினால் வண்டியைக் காணோம். சுற்றும் முற்றும் பார்த்தால் நேர் சாலையில் 100 மீட்டர் தள்ளி வண்டி நின்றது. நமட்டுச் சிரிப்போடு என்னைப் பார்த்த கடையின் முன் அமர்ந்திருந்த சவுதிகள் வண்டியை எங்கு நிறுத்தினாலும் ஹேண்ட் பிரேக்கைப் போடு. இப்ப பார்த்தியா நீ ஹேண்ட் பிரேக்கைப் போடல சாலை வழுக்குச் சாலை தன்னால உன் வண்டி ஓடிப் போய் நிற்குது. நல்ல வேளை யாரும் குறுக்க வரல்லேன்னு அறிவுரை வழங்கினார்கள்.

அதுக்கப்புறம் ஓட்டுனர் உரிமம் வாங்கி ஒரு மாதம் ஆகி விட்டது. நானும் வண்டியை எடுத்துக் கொண்டு பல இடங்களுக்கு செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாள் எனது கம்பெனி போர்மேன் அரங்கசாமியை அழைத்துக் கொண்டு ஒரு இடத்துக்கு சென்றேன். அரங்கசாமி சிறந்த ஓட்டுனர். எனது அருகில் அமர்ந்து வந்த அரங்கசாமி சொன்னார். “ சார் இப்ப எத்தனாவது கியரில் போறிங்கநான் சொன்னேன் 5ன்னு. கிளட்சை அழுத்துங்கன்னு சொன்னார். நானும் கிளட்சை அழுத்தவே அவர் கியரை அசைத்து ஒரு கியரைப் போட்டார். இதுதான் 5ன்னு. பாருங்க வண்டி ஒரு வேகமாக போக ஆரம்பித்தது. அப்புறம்தான் அவர் சொன்னார் மூணைப் போடுறிங்க அதுக்கப்புறம் நாலு போடுறிங்க ஆனா ஐந்துன்னு நினைச்சுகிட்டு மறுபடியும் மூணைத்தான் போடுறிங்க இப்படி ஓட்டினா சீக்கிரம் இன்சின் படுத்து விடும்.

அதுக்கப்புறம் அரங்க சாமியை ஒரு மாதம் கூட வைத்துக் கொண்டு வண்டி ஓட்டினேன். அப்புறம் போகப் போக சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பதற்கேற்ப இப்ப என்னோட ஓட்டுனர் திறமையைப் பார்த்து பலபேரு சொல்லுறாங்க காரை தேரு போல ஓட்டுறேனாம் ‘போங்க எதுக்கு தற்புகழ்சி”.


சனி, 19 பிப்ரவரி, 2011

இங்கு எல்லோருக்கும் ஒரே பண்டிகைதான்


தலைப்பைப் பார்த்தவுடன் நான் ஏதோ ஆன்மிகத்தப் பத்தி எழுதப் போறேன்னு நினைச்சுடாதிங்க. இது வேற. பொதுவா வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு அவர்கள் எந்த மதத்தச் சார்ந்தவரா இருந்தாலும் அனைவரும் ஆவலோட எதிர்பார்க்கும் பண்டிகை ஒன்னே ஒன்னுதான். அதுதான் Vacation விடுமுறை.


கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு வெளிநாடு வர்றவுங்க அந்த கடன அடைக்கும் வரைதான் ஊரைப்பத்தி நினைக்க மாட்டாங்க. கடனை அடைச்சுட்டா எல்லோருமே ஊருக்கு எப்பப் போவோம்னு நாளை எண்ண ஆரம்பிச்சுருவாங்க.


நல்லாப் படிச்சவுங்களுக்கு விடுமுறை 6மாசத்துக்கு ஒரு தடவையோ வருசத்துக்கு ஒரு முறையோ வரும். மத்தபடி எல்லோருக்கும் 2 வருசத்துக்கு ஒரு தடவையோ அல்லது 3 வருசத்துக்கு ஒரு முறையோதான் விடுமுறை வரும். இங்கே எல்லோரும் உழைக்கிறது எல்லாம் அந்த நாளை மனசுல வச்சுக்கிட்டுத்தான்.


சில பேரு வருசக்கணக்குல ஊருப்பக்கமே போகமாட்டாங்க. ஒரே மூச்சா பத்து பதினைஞ்சு வருசம் மொத்தமா இருந்துட்டு நாலு காச சேத்துட்டு ஊருல செட்டிலாயிடலாம்னு மாங்கு மாங்குன்னு உழைப்பாங்க. பெரும்பாலும் இந்தமாதிரி ஆளுங்க பொம்பளப் பிள்ளை பெத்தவுங்களா இருப்பாங்க. இல்லன்னா அக்கா தங்கச்சியை கரை சேர்க்கிற பொறுப்புல இருப்பாங்க. இது ரெண்டும் இல்லன்னா தங்கமணி தொந்தரவு தாங்காம பிக்க பிடுங்கல் இல்லாம இருக்கனும்னு நினைகிறவுங்களா இருப்பாங்க.

வெக்கேசனுக்கு அப்ளிகேசன் போட்டுடாங்கன்னா ஒரு மாதிரி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரி ஆயிடுவாங்க. எங்க கம்பெனி முகாம்ல மொத்த ஜனத்தொகை 20ஆயிரத்துக்கு மேல தாண்டும். இதுல வெக்கேசனுக்கு ரெடியா இருக்குறவுங்கள அவங்க நடந்துகிறதப் பொறுத்து ஈசியா அடையாளம் கண்டு பிடிச்சுடலாம்.


வேட்டைக்காரன் வீராச்சாமி படத்தப் பத்துதடவப் பாத்த மாதிரி சிடு சிடுன்னு மூஞ்ச வச்சுகிட்டு வருசக் கணக்குல வேலைப் பாத்துகிட்டு இருந்தவன் எல்லோரையும் பாத்து சினேகிதமா சிரிக்க ஆரம்பிச்சான்னா வெக்கேசன் எண்ணம் அவன் மனசுல வந்துருச்சுன்னு அர்த்தம்.


பாண்டா மார்கெட்டுல ஒரு மிக்சியைப் பாத்தேன், மாவு அரைக்குது, காயை வெட்டுது, பழத்தப் புழியுது ரொம்ப அருமையா இருக்குன்னு எலக்ட்ரானிக் பொருள்களைப் பத்தி பேச ஆரம்பிச்சாங்கன்னா ஆளு வெக்கேசன் அப்ளை பண்ணப் போறான்னு அர்த்தம்.


சுனாமி மாதிரி சொந்தபந்தங்கள் வந்து அடிச்சுட்டுப் போறதுக்கு கோடாரித் தைலம், யார்ட்லி பவுடர்,ஹீரோ பேனா, மேக்கப் பாக்ஸ், கால்குலேட்டர், எமர்ஜென்சி லைட், டார்ச் லைட்டு, லேடிஸ் வாட்ச், செண்டு பாட்டில், நோக்கியா போன், பேண்ட் பிட்டு, டீ சர்ட்டுன்னு சிறுக சிறுக பொருட்களைச் சேர்க்க ஆரம்பிச்சானுகனா வெக்கேசன் அப்ளை பண்ணிட்டான்னு அர்த்தம்.


சாயங்காலம் வேலைவிட்டு வந்தவுடன் ஷூவைக்கூட கழட்டாம சாப்பாட்டுக்கூடத்துக்கு போயி சாப்பிட்டுத் தூங்குறவன் சாப்பாடுக்கூடம் பக்கமே தலைவச்சு படுக்க மாட்டானுக. கேட்டா என்னன்னு தெரியல வயிறு ஒரு மாதிரி மந்தமா இருக்குன்னு சொன்னான்னா அவன் வெக்கேசன் மேலிடத்துல அப்ரூவல் ஆயிருச்சுன்னு அர்த்தம்.


இன்னிக்கு தங்கம் என்ன விலை, ரியால் எக்சேஞ் ரேட் என்னன்னு கேட்டான்னா வெக்கேசனுக்கு பதினைஞ்சு நாள் இருக்குன்னு அர்த்தம்.


ஊரே அடங்குன சாம நேரத்துலயும் ஒரு மூலையாப் பாத்து நின்னுகிட்டு காதில செல்போன வச்சுகிட்டுஇந்தா வந்துருவேம்மா, வந்தவுடன் பேசிக்கலாம், வரும்போது எல்லாம் வாங்கிட்டு வர்றேன்ன்னு ஒரு மணி நேரத்துக்கு மேல பேசிக்கிட்டு இருந்தான்னா வெக்கேசனுக்கு பத்துநாள் இருக்குன்னு அர்த்தம்.


ஏர் கார்கோ நல்லதா சீ கார்க்கோ நல்லதான்னு பட்டிமன்றம் நடத்துறமாதிரி பேச ஆரம்பிச்சான்னா பயபுள்ளைக்கு வெக்கேசன் ஒரு வாரம்தான் இருக்குன்னு அர்த்தம்.

“சார் ஒரு பிளைட்டு படத்துல என் பேரைப் போட்டு தம்மாம் டூ சென்னைன்னு நாலு பிரிண்டு போட்டுத் தாங்கன்னு கேட்டான்னா நாலு நாள்தான் இருக்குன்னு அர்த்தம்.


அப்புறம் கடைசியா ஆட்டுத்தாடி மாதிரி பிரஞ்சு பியர்ட் வச்சிகிட்டு திரிஞ்சவன், ஆட்டாம் புழுக்கை மாதிரி கீழ் உதட்டுக்கு கீழே நாலு முடி வச்சிகிட்டு திரிஞ்சவன், விருமாண்டி மாதிரி கிருதாவுக்கும் மீசைக்கும் கனைக்சன் கொடுத்துட்டு திரிஞ்சவன் மழு மழுன்னு சல்மான்கான் மாதிரி சேவ் செஞ்சுட்டு கார்னியர் அல்லது காத்ரேஜ் உபயத்துல தலையை கருப்பாக்கி பள பளன்னு ஆயிட்டான்னா புரிஞ்சுகிற வேண்டியதுதான் புள்ள நாளைக்கு ஊருக்குக் கிளம்பப் போகுதுன்னு.


அப்புறம் போகும் போது எல்லோர்ட்டயும் செல் நம்பர வாங்கிட்டு ஊருக்குப் போனது போன் பண்ணுறேன்னு சொல்வானுக. ஆனா ஏர்போர்ட்டுல கால வச்சதும் எல்லா நம்பரையும் மறந்துடுவானுக. அப்புறம் நாலஞ்சு மாசம் கழிச்சு பழையபடி மந்திரிச்சு விட்ட கோழி மாதிரியே திரும்பி வருவானுக.


“ஏண்டா ஊர்ல இருக்கும்போது ஒரு போன் கூட பண்ணலன்னு கேட்டா ‘பண்ணலாம்னுதாண்டா நினைச்சேன் பயபுள்ள இந்த சிம்கார்டு தொலஞ்சுப் போச்சுடான்னு சொல்லுவானுக.

புதன், 26 ஜனவரி, 2011

சவுதியில் ஒரு வாய்க்காலுக்கு என்னுடைய பெயர்


பத்து நாளைக்கு முன்னே எங்க கம்பெனி போர்மென் அரங்கசாமி எனக்கு போன் பண்ணுனார். “சார் சைட்டுல ஒரு பிரச்சினை உடனே வாங்க.

அரங்கசாமி நம்ம ஊருக்காரருதான், சவுதில 20 வருசம் சர்வீஸ், சவுதி அல் ஹாசா மாவட்டத்துல அவருக்கு எல்லா இடமும் அத்துபடி.

சவுதி அல் ஹாசா மாவட்டத்துல பல இடத்தில கம்பெனிக்கு வேலை நடக்கிறதால “எங்கண்ணே வரனும்ன்னு நான் கேட்டேன்.

“பட்டாலியா சுல்த்தான் பள்ளிவாசலுக்கு கிழக்கே தணிகாசலம் வாய்க்காலுக்கு வந்துருங்கன்னு அரங்கசாமி சொன்னார்.

அல் ஹாசா மாவட்டம் சவுதி பாலைவனத்துலேயே ஒரு சோலை வனம். நம்ம ஊரு மாதிரியே இங்கே எல்லாவித பழமரங்களும் விளையும். குறிப்பா பேரீச்சை மரம் அதிகம். சவுதி அரசாங்கம் இந்த மாவட்டம் முழுவதும் வாய்க்கால்கள் மூலமாக பாசன வசதி செய்து கொடுத்திருக்கிறது. மேலும் கழிவு நீர் வெளியேறவும் அரசு வாய்க்கால் வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது. அதுனால எங்கப் பாத்தாலும் இந்த மாவட்டம் முழுவதும் சாலையின் நடுவிலும் ஓரத்திலும் வாய்க்கால்களாக இருக்கும்.வாய்க்கால்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு எண் உண்டு. டி1,டி2,டி3 என கணக்கிலடங்காத வாய்க்கால்கள் இந்த மாவட்டத்தில் உண்டு.

எனக்கு ஒரு ஆச்சர்யம், பெரும்பாலும் சவுதி சாலைகளுக்கே கிங்பாத் சாலை, அப்துல் அஜிஸ் சாலை, கிங் பைசல் சாலை என மன்னர்கள் பெயர் மட்டும்தான் இருக்கும். இதில் வாய்க்காலுக்கு தணிகாசலம் வாய்க்கால் என எப்படி பெயர் வந்தது?

ஆர்வம் மேலிடவே நான் அரங்கசாமியிடம் கேட்டேன். “என்னது தணிகாசலம் வாய்க்காலா? எப்படி அதுக்கு அந்த பெயர் வந்தது?

“இப்பத்தான சார் வந்துருக்கிங்க போகப் போக நீங்களே தெரிஞ்சிகிருவிங்கன்னு அந்த வாய்க்காலுக்கு வர்றதுக்கு வழியையும் சொன்னார். அவரு சொன்னமாதிரி அந்த வாய்க்காலுக்கு வண்டியில போய் சேர்ந்தேன்.

வாய்க்கால் ஆரம்பத்துல டி1 என்று மட்டும்தான் எழுதியிருந்தது. ‘என்னங்க தணிகாசலம் வாய்க்காலுன்னுதான் சொன்னிங்க இங்க எந்த போர்டையும் காணோமேன்னு கேட்டேன்.

“அது கவர்மெண்டு நம்பர் சார், ஆனா நம்ம கம்பெனிகாரங்களுக்கு இதை தணிகாசலம் வாய்க்காலுன்னு சொன்னாத்தான் தெரியும். அதுமட்டுமா இங்கே சர்புதின் வாய்க்கால், அஷ்ரப் வாய்க்கால், தாமஸ் வாய்க்காலுன்னு நம்ம கம்பெனி ஆட்கள் பேரில நிறைய வாய்க்கால் இருக்கு. ஏன் நாளைக்கே தங்கராசு நாகேந்திரன் வாய்க்காலுன்னு உங்க பேரிலயே ஒரு வாய்க்கால் வரும் அப்ப நீங்க புரிஞ்சுகிருவிங்கன்னு பூடகமாக முடித்தார்.

சரிதான் நம்ம மதுரையில பாண்டிங்கிற பேருல பல ஆட்கள் இருக்கும்போது அவர்களை தனித்தனியே இனம் காண குட்டைப் பாண்டி நெட்டைப்பாண்டி, வெள்ளைப்பாண்டின்னு பட்டப் பெயர் சொல்லி அழைப்பதை போல இதுல ஏதாவது விசயம் இருக்குமுன்னு நினைச்சுகிட்டேன். அப்போதைக்கு வேலைச் சிக்கலை தீர்க்க முனைப்பட்டதில் அந்த விசயம் மறந்து போனது.

இன்னிக்கு சவுதில நல்ல மழை. அதிகாலை 4 மணிக்கு புடிச்ச மழை 6 மணி வரைக்கும் விடவே இல்லை. அதுக்கப்புறம் 9 மணிக்கு நான் காரை எடுத்துக்கிட்டு பனிமான் என்கிற இடத்துக்கு ஆய்வுக்கு சென்றேன். தோட்டம் உள்ள மஜுரா பகுதிக்கு சென்றபோது நல்ல மழை பெய்திருந்ததால் மணல் சாலை வழுக்க ஆரம்பித்தது. கவனமாக வண்டி ஓட்டியும் ஒரு திருப்பத்தில் திருப்பும்போது சாலை வழுக்கியதால் வண்டி நடுவில் இருந்த வாய்க்காலில் இறங்கிவிட்டது. நல்ல வேளை வாய்க்கால் ஆழம் அதிகம் இல்லாததால் எனக்கு அடி ஒன்றும் படவில்லை.

அப்புறம் என்ன கம்பெனிக்கு போன் போட்டு கிரேன் கொண்டு வந்து வண்டியை தூக்கி திரும்பவும் கம்பெனிக்கு வந்தபோது அரங்கசாமி கேட்டார்.

“சார் அந்த வாய்க்கால் நம்பர் என்ன?

“ம் டி22AG ஏன் கேட்கிறிங்கன்னு கேட்டேன்.

அரங்கசாமி சொன்னார். “அது கவர்மெண்டு நம்பரு, இன்னைலருந்து அந்த வாய்க்காலுக்கு பேரு தஙகராசு நாகேந்திரன் கேனால்


வியாழன், 13 ஜனவரி, 2011

உனக்கு இன்னிக்கு வியாழக்கிழமையாடா?


எங்க ஊருல எவனாவது ஒரு மாதிரியா மறை கழண்ட மாதிரி பேசுனா உடனே எல்லோரும் அவனைப் பாத்து சொல்லுற வார்த்தை “ஏண்டா உனக்கு இன்னிக்கு வியாழக்கிழமையாடா?

வியாழக்கிழமைல்ல அப்படி என்ன விசேசம், எங்க ஊருல இருந்து 9 கீமீ தள்ளி உள்ள ஏர்வாடி தர்ஹாதான் காரணம்.

ஏர்வாடின்னதும் இப்ப எல்லோருக்கும் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்.வாரத்தில் ஆறு நாள் வெறிச்சோடிக் கிடக்கும் ஏர்வாடி தர்ஹா வியாழக்கிழமையானதும் களை கட்டிடும். ஈயடிச்சுகிட்டு கிடக்கிற டீக்கடைகள் எல்லாம் வியாழக்கிழமை கல்லாக் கட்டிடும்.

தமிழ்நாட்டுல இருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களில் இருந்தும் கூட்டம் வரும். குறிப்பா கேரளாவில் இருந்து. பேய் புடிச்சவன், பிசாசு புடிச்சவன், முனி அடிச்சவன், மோகினி பிடிச்சவன்ன்னு பல ரகமா வருவாங்க இதோடு மன நிலை பிறழ்ந்தவர்கள் ஏராளம் வருவாங்க.

வியாழக்கிழமைதான் தர்ஹாவில் அடங்கியுள்ள பாதுசா நாயகத்துக்கு உகந்த நாள். வந்து தர்ஹாவில் தங்கி பாத்தியா ஓதி சக்கரையை வாங்கி சாப்பிட்டுட்டு வசதி இருந்தா ஏதாவது லாட்ஜுலேயோ, வசதி இல்லாதவங்க தர்ஹா உள்ளேயும் படுத்துட்டு காலையில் எந்திரிச்சு ஊருக்குப் போவாங்க.

நம்ம வீட்டுல யாருக்காவது மன நலம் குன்றினால் ஆரம்பத்துல கையில காசு இருக்கிற வரைக்கும் ருத்ரன் மாதிரி டாக்டர்கிட்ட காட்டுவோம். அப்புறம் காசு இல்லைன்னா அதிலும் கொஞ்சம் அமைதியான பைத்தியமா இருந்தா வீட்டோட வச்சிக்கிறுவோம். வசதி இல்லாத வீட்டுல அடங்காத பைத்தியமா இருந்தா என்ன பண்ண முடியும். அண்டை அயலார்கள் என்ன சொல்லுவார்கள் ‘ போயி எங்கயாவது கோவிலோ தர்ஹாவிலோ கட்டுங்கப்பான்னு. இந்த மாதிரிதான் ஏர்வாடி நாகூருன்னு பைத்தியங்களை கொண்டு வந்து விடுவாங்க.

முன்னே ஏர்வாடில மனநலம் குன்றியவர்களைப் பராமரிக்கும் ஆசிரமம் (MENTAL ASYLUM) ஒரு தொழிலாகவே நடந்து வந்தது. இதை தங்கல்கள் என்னும் பொறுப்பளர்கள் நடத்தி வந்தனர்.ஒரு நபரை பராமரிப்பதற்கு ரூ 1000 முதல் 2000 வரை வசூலித்து வந்தனர். எந்த நிலையத்திற்கும் அரசு அனுமதி கிடையாது. எந்த நிலையத்திலும் அடிப்படை வசதி கிடையாது. உணவு கூட இவர்கள் வழங்குவதில்லை. தர்ஹா வரும் பக்தர்கள் நேர்த்தியாக செலுத்தும் முராது என்னும் காணிக்கை மூலமாகத்தான் உணவு வழங்கப்பட்டு வந்தது.

தென்னைஓலை வேயப்பட்ட குடிசைக்குள் வேலிக்கற்களில் மனநலம் குன்றியவர்களை சங்கிலியால் கட்டி வைத்திருப்பார்கள். குற்றாலம் குனசீலம் போல் மூலிகை சிகிச்சை எதுவும் கிடையாது. மாலை நேரமானதும் மனநோயாளிகளை கால்நடைகளை மேய்ச்சலுக்கு பத்திச் செல்வதுபோல் கைகளில் குச்சியை வைத்துக் கொண்டு காப்பாளர்கள் தர்ஹாவுக்கு கொண்டு செல்வார்கள். அங்கு தர்ஹாவினை ஒரு முறை வலம் வந்து திரும்ப ஆசிரமத்திற்கு கொண்டு வந்து கட்டிப் போடுவார்கள்.

தர்ஹாவில் அடங்கியிருக்கிற பாதுசா நாயகம் அவுலியா எப்ப இந்த தங்கல்கள் கனவில் வந்து சொல்லுகிறாரோ அதுவரை இந்த சிகிச்சை? மன நோயாளிகளுக்குத் தொடரும். எனக்குத் தெரிந்து எவன் கணவிலும் அவுலியாவோ அல்லது ஆண்டவனோ வந்து சொன்னதில்லை. ஒரு தடவை ச்ங்கிலியால் கட்டிபுட்டானுகனா அந்த மனநோயாளி செத்து சுண்ணாம்பாகி போகிற வரைக்கும் வச்சிருப்பானுக. மன நோயாளிகளின் உறவினர்களும் விட்டதுடா தொல்லைன்னு வந்து பாடியை வாங்கிட்டுப் போவானுக.

கடந்த 2001ல் நடந்த கோர சம்பவத்தில் இருபதுக்கும் மேற்பட்ட மனநோயாளிகள் சங்கிலியால் பினைக்கப்பட்டு இருந்ததால் தப்பிக்க வழியில்லாமல் கருகி துடிதுடித்து உயிர் இழந்த சம்பவத்திற்கு பின் மன நல காப்பகம் அனைத்தும் மூடப்பட்டது. இருப்பினும் மனநோயாளிகள் இன்னும் ஏர்வாடியில் சுத்திதான் திரியுறாங்க.

சில மனநோயாளிகளை பாத்தவுடன் கண்டுபிடிப்பது சுலபம். அழுக்கு மற்றும் கிழிந்த உடையுடன் நீண்டநாள் சவரம் செய்யப்படாத தாடியுடன் தனக்குத்தானே பேசிக் கொண்டோ சிரித்துக் கொண்டோ இருப்பார்கள். ஆனா சிலபேரை கண்டு கொள்வது கடினம். நம்ம வடிவேலுகிட்ட ஒருவர் ஒசாமா பின்லேடன் அட்ரஸ் கேட்பாரே அதுபோல் டீசண்டா பேசுவானுக. கொஞ்சம் பேசுன பின்னாடிதான் தெரியும் “ஆகா வியாழக்கிழமை ஆளுடான்னு

இப்படித்தான் ஒருநாளு ஒரு மலையாளி தர்ஹா வாசலில் இருக்கிற டீக்கடையிலே என்கிட்ட தமிழ் இலக்கியம் பத்தி பேசினான். ஆஹா மலையாளி தமிழ் இலக்கியத்தப் பத்தி பேசுறானேன்னு நானும் அவன் பேச்சைக் கேட்க ஆரம்பிச்சேன். பத்துப்பாட்டு எட்டுத்தொகை புறநானுறு அகநானுறுன்லாம் பேசிட்டு வந்தவன், என்கிட்ட கேட்டான். உனக்கு மலையாள இலக்கியம் தெரியுமான்னு நான் சொன்னேன் ‘எனக்கு மலையாளமே தெரியாது இதுல எப்படி மலையாள இலக்கியம் தெரியுமுன்னு. ஆரம்பிச்சான் பாருங்க ஏக வசனத்துல “ஏண்டா நான் தமிழைப் பத்தி தெரிஞ்சி வச்சிருக்கேன் நீ ஏன் மலையாளம் பத்தி தெரிஞ்சு வச்சிகலன்னு அப்பத்தான் எனக்கு புடிபட்டது “ஆஹா இவன் வியாழக்கிழமை ஆளுன்னு

அப்புறம் ஒரு நாளு ஏர்வாடில இருந்து கீழக்கரை வர பேருந்துக்கு காத்துகிட்டு இருக்கும்போது ஒருத்தன் கையில செல்போன் வச்சிப் பேசிகிட்டு இருந்தான். இவனும் மலையாளிதான்.ஆள் பாக்குறதுக்கு டீசண்டா பேண்ட் சட்டைல்லாம் போட்டு இன் பண்ணியிருந்தான். போன் பேசி முடிச்சவன் என் கிட்ட சொன்னான் ஒரு ஸ்டேடிக் (STATIC) சொல்லுது இந்தியாவுல 50 பெர்சண்டேஜ் பைத்தியமுன்னு நான் உடனே ஆர்வக்கோளாறாகி எப்படி சொல்லுறிங்கன்னு கேட்டேன். அதுக்கு அவன் அங்கே தலையை சொரிஞ்சுகிட்டு என்னை மாதிரி பேருந்துக்கு காத்திகிட்டு இருந்த ஒரு ஆளைக் காட்டி இவன் ஒரு பைத்தியமுன்னு சொன்னான்.

அந்தாளும் பாக்குறதுக்கு என் கண்ணுக்கு பைத்தியம் போலவே இருந்தான். அப்புறம் காரில் உட்கார்ந்து யாருக்காகவோ காத்துகிட்டு இருந்த ஒரு முதியவரைப் பார்த்து ‘இந்த கிழவனும் பைத்தியமுன்னு சொன்னான். கொஞ்ச நேரம் கழித்து யாருக்கோ போன் செய்தான். பின் தலையை இடதும் வலதுமாக பலமாக ஆட்டினான். இதுபோல தொடர்ந்து நான்கைந்து முறை செய்தான். நான் கேட்டேன் “என்ன டவர் கிடைக்கலியான்னு அதுக்கு அவன் சொன்னான் “குறுக்கே பேசாதே நான் போன் வேலை செய்யுதான்னு செக் பண்ணிகிட்டு இருக்கேன்னு அப்புறமா பாத்தா இரண்டு பெரியவர்கள் அவனைத் தேடி வந்து கையைப் பிடிச்சு இழுத்துட்டு போனாங்க.போறப்ப என்கிட்ட சொன்னாங்க “கொஞ்சம் பிராந்து ஏதாவது சொன்னானான்னு

அடப்பாவி காமாலைக்காரனுக்கு கணடெதெல்லாம் மஞ்சள்ன்னு மாதிரி இந்த பைத்தியம் இந்தியாவில் 50 பெர்செண்டேஜ் பேர் பைத்தியமுன்னு சொல்லிட்டானேன்னு எனக்கு சிரிப்பு வந்தது.

இந்த சிரிப்பு வீட்டுக்குப் போனதும் தொடர்ந்தது. என்னைப் பார்த்த எங்கம்மா சொன்னாங்கஏண்டா தன்னால சிரிச்சிகிட்டு இருக்கே இன்னிக்கு உனக்கு வியாழக்கிழமையான்னு கேட்டுகிட்டே வந்த என் பொண்டாட்டி சொன்னா “அம்மா உங்க மகனுக்கு எல்லா நாளும் வியாழக்கிழமைதான்னு

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

கடவுச்சீட்டை கடாசப் போறேன்

அனைவருக்கும் வணக்கம்

மீண்டும் உங்கள் அனைவரையும் பதிவுலகத்தில் சந்திப்பதில்
பெரு மகிழ்ச்சி.



இந்தப் பதிவின் மூலம் எனது சமீபத்திய சோதனையை பதிவுலக
நண்பர்கள் அனைவரின் முன்னும் வைக்கிறேன். அதில் யாரேனும்
ஒருவர் இந்த சோதனையைக் கடக்க வழி சொன்னால் மிகவும்
மகிழ்சி அடைவேன்.

சோதனை இதுதான்

கடந்த மூண்றாண்டுகளாக நான் சவுதி அரேபியாவில் வேலை
பார்த்தேன். என்னுடைய கடவுச்சீட்டு நான் சவுதியில் வேலைப்
பார்க்கும் போதே கடந்த 2007 வருடம் காலாவதியாகிவிட்டது.
எனவே அது சவுதி ரியாத் இந்திய தூதரகத்தில் புதுப்பிக்கப்பட்டது
இந்த கடவுச்சீட்டில் என்ன வேடிக்கை என்றால் வழக்கமாக பொறியாளர்களுக்கு
வழங்கப்படும் ECNR எனப்படும் "குடியேற்ற சோதனை தேவையில்லை" என்னும்
தகுதி வழங்கப்படவில்லை. நானும் அது குறித்து ஐயப்படவில்லை. ஏன் எனில்
அந்த கடவுச்சீட்டின் மூலம் நான் 3 முறை இந்தியாவுக்கும் இரண்டு
முறை சவுதிக்கும் பயணம் செய்திருக்கிறேன்.




ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு நான் கடந்த 2009 செப்டம்பர்
மாதம் தாயகம் திரும்பினேன். 9 மாதங்கள் ஊரிலேயே காலம் கழித்தபின்
கடந்த 2010 மே மாதம் மறுபடியும் சவுதி நிறுவனம் ஒன்றுக்கு
நேர்முகத்தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பயண ஏற்பாட்டினை
நேர்முகத்தேர்வி்னை ஏற்பாடு செய்த பயண அலுவலகமே பொறுப்பேற்றுக்
கொண்டது. அவர்களும் இந்த ECNR தகுதியை ஆராயாமல் எனக்கு விமான
பயணச்சீட்டு வழங்கினர். இதை எடுத்துக் கொண்டு சென்னை விமான
நிலையம் சென்ற எனக்கு சோதனை ஆரம்பம் ஆயிற்று. குடியேற்ற
சோதனை அதிகாரிகள் உனது கடவுச்சீட்டில் ECNR முத்திரை இல்லாததால்
நீ பயணம் செய்ய இயலாது என கைவிரித்தனர்.



உடன் பயணம் ஏற்பாடு செய்த அலுவலகத்தினை தொடர்பு கொண்டபோது
அவர்கள் நாங்கள் ஏதும் செய்ய இயலாது உடன் உங்கள் அருகாமையிலுள்ள
கடவுச்சீட்டு அலுவலகம் சென்று விண்ணப்பித்து முத்திரையை பெற்றுக்
கொண்டு பின் பயணம் செய்யவும். இதற்கு நீண்ட காலம் ஆகாது. காலையில்
கொடுத்தால் மாலையில் வழங்கி விடுவார்கள். செல்லும் போது உங்கள் பட்டச்
சான்றிதழ்களின் அசலைக் கொண்டு செல்லவும் என அறிவுரை வழங்கினார்கள்.





அதன்படி நான் என் ஊரின் அருகாமையிலுள்ள மதுரை கடவுச்சீட்டு அலுவலகம்
சென்று விண்ணபித்த போது அங்குள்ள அதிகாரி கூறினார். தம்பி உனது கடவுச்சீட்டு
சவுதியில் வழங்கப்பட்டுள்ளது. எனவே உனக்கு மாவட்ட காவல் துறை மூலம் ஆய்வு
செய்யப்பட்டே முத்திரை வழங்கப்படும். குறைந்தது அதற்கு பதினைந்து நாட்கள் ஆகும்
எனக்கூறி எனது பள்ளிச்சான்றிதழ் முதல் பட்டச்சான்றிதழ் வரை அசல் சான்றிதழ்களை
ஆய்வு செய்த பின் பணம் கட்டிச்செல் எனக்கூறினார்.அதன்படி நானும் பணம் கட்டி
எனது அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் அசல் கடவுச்சீட்டினையும் ஒப்படைத்து
வீடு திரும்பினேன்.



பத்து நாட்கள் கடந்தபின் எனக்கு உள்ளூர் காவல் நிலையத்தில் அழைப்பு வந்தது.எனது
அசல் சான்றிதழ்களை பார்வையிட்ட அதிகாரி எனது குடிமைப்பொருள் வழங்கும் அட்டையைப்
பார்வையிட்டப் பின் கூறினார். தம்பி உனது கடவுச்சீட்டில் ஒரு முகவரியும், குடிமைப்பொருள் வழங்கு
அட்டையில் ஒரு முகவரியும் உள்ளதே என வினவினார். ஆம் ஐயா நான் முதல் கடவுச்சீட்டு எடுக்கும்போது வாடகை வீட்டில் இருந்தேன். பின்னர் 6 வருடங்கள் கழித்து சொந்தவீடு கட்டி
மாறி விட்டேன் எனக் கூறினேன். மேலும் ECNR முத்திரைக்கு எனது பட்டச்சான்றிதழே போதுமானது
என கூறினேன். அதை ஏற்காத காவல் அதிகாரி இராமநாத்புரம் வட்ட வருவாய் அலுவலகம்
சென்று உனது பழைய குடிமைப்பொருள் வழங்கு அட்டையின் அசலை கொண்டு வந்தால்தான் நான் உனது விண்ணப்பத்தினை நிறைவு செய்து அனுப்புவேன் எனவே அதற்கான முயற்சியில் இறங்கு என வேறு அலுவலில் மூழ்கினார்.




வட்ட வருவாய் அலுவலகம் செல்வது என்பது எனக்கு பள்ளி பயிலும் காலம் தொட்டு
வேப்பங்காய் சுவைப்பது போல. பல முறைகள் இருப்பிடச்சான்றிதழ்களுக்கும் சாதி
சான்றிதழ்களுக்கும் அலைந்து திரிந்து அங்குள்ள அதிகாரிகளின் அலட்சியப்போக்கினையும்
காலம் கடத்தும் அவலத்தினையும் நன்கு அறிந்தவன்.

கசப்போடு வீடு திரும்பிய எனக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருந்தது. அது அஞ்சலகம் மூலமாக
பதிவு அஞ்சலில் வந்த எனது அசல் கடவுச்சீட்டு. திறந்து பார்த்தபோது உள்ளே
இரண்டாம் பக்கத்தில் வழங்கப்பட்டிருந்த எனது ECR முத்திரை அழிக்கப்பட்டு ECNR வழங்கப்பட்டிருந்தது
மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்தினால்.





எந்த அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தேனோ அதே அலுவலகம் மூலம் கடவுச்சீட்டு வழங்கப்படும்
போது நான் வேறு என்ன செய்வேன் அப்பன் முருகனுக்கு நண்றி கூறிவிட்டு அடுத்த பேருந்தில் ஏறி
சென்னை சென்று விமான பயணச்சீட்டினை மாற்றி அன்றிரவே சவுதி வந்து சேர்ந்தேன்.


இங்கு வந்த பின் ஒரு மாதம் கழித்து என் தாயார் ஒரு முறை தொடர்பு கொண்டு உன்னை காவல்
அதிகாரி வந்து கேட்டார். அவரிடம் நீ சவுதியில் இருப்பதாக கூறினேன் என சொன்னார்.
நமக்கு கடவுச்சீட்டு வந்து விட்ட்து இவர் எதற்கு மறுபடியும் தேடுகிறார் என நானும் அந்த
தகவலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு மாதம் கழித்து என் தாயார்
எனக்கு கடவுச்சீட்டு அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்ததாக மின் அஞ்சலில் அந்த கடிதத்தினை அனுப்பினார்.






அதில் கடவுச்சீட்டு அலுவலகம் இவ்வாறு கூறியிருந்தது.
உன்னைப்பற்றி காவல்துறை தகவல்கள் எதிர்மறையாக இருப்பதால்
இந்த கடிதம் கண்டதும் உடனே உனது கடவுச்சீட்டை மதுரை அலுவலகத்தில் ஒப்படைக்கவும்
தவறினால் உன் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதியிருந்தது.
"அடப்பாவிகளா நீங்கள்தானே கடவுச்சீட்டை அஞ்சலில் அனுப்பினீர்கள் அதைக்கொண்டு நான்
சவுதி வேறு வந்து விட்டேன் இங்கிருந்து உனக்கு எப்படி நான் கடவுச்சீட்டை ஒப்படைப்பது
ஒன்னும் புரியவில்லையே என நான் ஒரு மின் அஞ்சல் மதுரை கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு
அனுப்பி வைத்தேன்.


அதற்கு பதில் அஞ்சல் அனுப்பிய அதிகாரி நீ ஊருக்கு வரும்போது உனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும்
என எழுதியிருந்தார்.


இப்போது என் குழப்பமெல்லாம்
நான் ஊருக்கு வந்தால் என் கடவுச்சீட்டை பறிமுதல் செய்வார்களா?
மறுபடியும் வட்ட வருவாய் அலுவலகம் சென்று குடிமைப்பொருள் வழங்கு அட்டையினை
வாங்கச் சொல்வார்களா?
ஒரு பொறியாளனுக்கு குடிமையேற்ற சோதனை தேவை இல்லை என சொல்லுவதற்கு
அவனது பட்டச்சான்றிதழ் போதாதா?
நாட்டில் அவனவன் போலி கடவுச்சீட்டுகளை வைத்துக் கொண்டு பெயர் மாற்றம் செய்து
கொண்டு என்னென்ன போக்கிரித்தனமெல்லாம் செய்கிறான்கள் அவர்களை விட்டு விட்டு
அப்பாவி பொறியாளன் ஒருவனை காவல் துறை எதிர்மறை தகவல் என பயமுறுத்தும்
இந்த கடவுச்சீட்டு அலுவலகத்தினை என்ன செய்தால் தகும்?


பேசாமல் நான் ஒன்று செய்யலாம் என இருக்கிறேன். நாட்டுக்கு வந்து
போங்கடா நீங்களும் உங்கள் கடவுச்சீட்டும் என கடவுச்சீட்டை வீசியெறிந்து
விட்டு உள்ளுரிலேயே ஒரு பெட்டிக் கடை வைத்து பொழப்பைப் பார்க்க வேண்டியதுதான்!!!!!